அம்மா..
அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. (கவிதை) வித்யாசாகர்
காய்கறி
வாங்கி வருகையில்
ஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா
வெண்டைக்காய் வாங்கி வருகையில்
கொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா
தக்காளி நறுக்குகையில்
ஒரு துண்டு கேட்கும் தம்பி
வெங்காயம் நானுரித்தால்
கண்ணீர் வருமென்று வாங்கிக்கொண்ட
அண்ணன்
பூண்டுரிக்கும் போதே
நுனி தேய்த்து
கதைகள் பல சொன்னப் பாட்டி
கட்டம்கட்டி ஆடுகையில்
கூதலாட்டம் ஆடிய தோழி
காத்திருந்தேன்
நெஞ்சே வெடித்துவிட்டதென சொன்ன அவன்
கவலை வேண்டாம்
நானிருக்கேன்னு சொன்ன அவர்
இது உன் வீடு
உள்ளே வான்னு அணைத்துக்கொண்ட
மாமியா(ர்)
அம்மான்னா அம்மாதான்’ வளர்ந்ததும்
கொஞ்சியப் பிள்ளைகள்
அவ இல்லைன்னா
நானில்லை ம்மா – முளைவிட்ட
தலைமுறை
நானும்
அம்மான்னே கூப்பிடவா அத்தே’
வலதுகால் பாராமல் உள்நுழைந்த மறுமகள்
அப்பத்தா
அம்மம்மான்னு
உயிர்விடும் அன்புப் பெயரப்பிஞ்சுகள்..
இப்படி
இன்னும்
யார் யாரை நினைத்துக்கொண்டு
சொட்டுகிறதோ தெரியவில்லை
படுக்கையிலிருக்கும்
அம்மாவின் கண்களிலிருந்துச் சொட்டுமந்த
ஒவ்வொருச் சொட்டுக் கண்ணீரும்..
—————————— —————————— —————————
வித்யாசாகர்
Tags: அம்மா