எழுத்தால் போட முடியாத எடை … !
- கவிஞர் வாலி
எழுத்தால் போட முடியாத எடை … !
– கவிஞர் வாலி
பாடம் பயில நான்
பள்ளிவாசல் புகுந்த
பிராயந்தொட்டு
தொழுகை புரிய
பள்ளிவாசல் புகுவாரோடு
பழகி நின்றவன்!
அவர்களது அன்பை
ஆரா அமுதமாய்
தின்றவன் !
என் ஒவ்வொரு பருவத்திலும்
எனக்கு
ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்
இஸ்லாமிய இனத்தவர்
அவரெலாம் – தண்ணீர் கலவா
தாய்ப்பால் மனத்தவர் !
இன்றைய என் ஏற்றம்
அவர்களிட்ட பிச்சை
இதைச் சொல்ல
எனக்கில்லை லஜ்ஜை !
எல்லா சமயமும்
எல்லாச்சமயமும்
பேசுவது அன்பு
பேணுவது அறம்
இதை ஒர்ந்தார்க்கு
இயல்பாகக் கைவரும்
சமயப் பொறை எனும்
இமயப் பொறை !
இந்தப் பொறை இருப்பின்
இச்சமயம்
அச்சமயம் என
எச்சமயமாயினும்
எவரும்
அச்சமின்றி வாழலாம்
என்பதை உணர்ந்து
வாழ்ந்திடும் மன்பதை !
கவிவேந்தர் மு.மேத்தா
காவியமாய் வரைந்த
நபிகளார் வரலாற்றை
வரிவிடாமல் படித்தவன்
படித்து –
பரவசத்தில்
புளகாங்கிதம் எய்தி
விழிப்புனலை வடித்தவன் !
அருளார்ந்த
அத்தனும் அன்னையுமான
அப்துல்லாவும் ஆமினாவும்
இருளார்ந்த உலகிற்கு
ஓர்
இரவியை ஈந்தனர்
அங்கனம் ஈர்ந்ததால்
அவர்கள் மரித்த பின்னும்
மக்கள் மனங்களில் மீந்தனர் !
அண்ணலார் அவர்கள்
என்பு தோல் கொண்டு
எழுந்து வந்த
அன்புரு !
மறம் தன்னை
புறம் காண வந்த
அறம் !
காலணி அணிந்து
தர்மம் நடந்த
நூலணி !
மனிதம் என்னும்
வடிவில் வந்த
புனிதம் !
பயிர் உய்ய பெய்யும்
வான் மழைபோல்
ஞாலத்தின்
உயிர் உய்யப் பெய்த
ஞான மழை !
உலகு வணங்கும்
உயரிய விழுமங்களின்
மொத்தக் குழுமம்
தகிக்கும் பாலையில்
தவிக்கும் வேர்களுக்கான
தண்ணீர்த் தடாகம் !
கதியற்றோர் கண்ணீரைத்
துடைக்க வந்த
பூந்துவாலை !
விட்டொழிக்க வேண்டிய
வெற்றுச் சடங்குகளை
சுட்டெரிக்க வந்த
செந்தணல் சுவாலை !
எவ்வுயிரும்
ஏற்று நிற்கும்
செவ்வுயிர் !
சுருங்கச் சொன்னால்
அண்ணல் நபிகளார் அவர்கள்
இவ்வுலகிற்கு
இறைவன் தந்த கொடை
எழுத்தால்
போட முடியாத எடை !
தூரிகையால்
தீட்ட முடியாத ஓவியம் !
யாப்பதிகாரங்களால்
காட்ட முடியாத காவியம் !
வார்த்தைகளால்
சுட்ட முடியாதவர்
வானம் போல்
எட்ட முடியாதவர் !
பகை புகுந்த நெஞ்சத்தார்
பார்வையில் படாமல்
குகை புகுந்த குணாளரை
கதீஜா மணாளரை
காத்து நின்றது – ஒரு
கருஞ்சிலந்தி ! அது –
வாய் நூலால்
குகைக்கு
வாய்ப் பூட்டுப் போட்ட
அருஞ்சிலந்தி !
ஆறறிவிடமிருந்து – ஒரு
பேரறிவை
ஆன்றறிவில்லாத ஒரு
மூன்றறிவுக் காத்தது
அதனால் அதற்கு
அழியாப் புகழ் பூத்தது !
நபிகளார் பற்றி
நாளெல்லாம் சொல்லலாம்
சொல்லச் சொல்ல
இன்னும்
சொல்லாததாய் இருக்கும்
சொல்லலாம் !
- நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007