எழுத்தால் போட முடியாத எடை … !

Vinkmag ad
  • கவிஞர் வாலி

எழுத்தால் போட முடியாத எடை … !
– கவிஞர் வாலி

பாடம் பயில நான்
பள்ளிவாசல் புகுந்த
பிராயந்தொட்டு
தொழுகை புரிய
பள்ளிவாசல் புகுவாரோடு
பழகி நின்றவன்!
அவர்களது அன்பை
ஆரா அமுதமாய்
தின்றவன் !

என் ஒவ்வொரு பருவத்திலும்
எனக்கு
ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்
இஸ்லாமிய இனத்தவர்
அவரெலாம் – தண்ணீர் கலவா
தாய்ப்பால் மனத்தவர் !

இன்றைய என் ஏற்றம்
அவர்களிட்ட பிச்சை
இதைச் சொல்ல
எனக்கில்லை லஜ்ஜை !

எல்லா சமயமும்
எல்லாச்சமயமும்
பேசுவது அன்பு
பேணுவது அறம்
இதை ஒர்ந்தார்க்கு
இயல்பாகக் கைவரும்
சமயப் பொறை எனும்
இமயப் பொறை !

இந்தப் பொறை இருப்பின்
இச்சமயம்
அச்சமயம் என
எச்சமயமாயினும்
எவரும்
அச்சமின்றி வாழலாம்
என்பதை உணர்ந்து
வாழ்ந்திடும் மன்பதை !

கவிவேந்தர் மு.மேத்தா
காவியமாய் வரைந்த
நபிகளார் வரலாற்றை
வரிவிடாமல் படித்தவன்
படித்து –
பரவசத்தில்
புளகாங்கிதம் எய்தி
விழிப்புனலை வடித்தவன் !

அருளார்ந்த
அத்தனும் அன்னையுமான
அப்துல்லாவும் ஆமினாவும்
இருளார்ந்த உலகிற்கு
ஓர்
இரவியை ஈந்தனர்
அங்கனம் ஈர்ந்ததால்
அவர்கள் மரித்த பின்னும்
மக்கள் மனங்களில் மீந்தனர் !

அண்ணலார் அவர்கள்
என்பு தோல் கொண்டு
எழுந்து வந்த
அன்புரு !

மறம் தன்னை
புறம் காண வந்த
அறம் !

காலணி அணிந்து
தர்மம் நடந்த
நூலணி !

மனிதம் என்னும்
வடிவில் வந்த
புனிதம் !

பயிர் உய்ய பெய்யும்
வான் மழைபோல்
ஞாலத்தின்
உயிர் உய்யப் பெய்த
ஞான மழை !

உலகு வணங்கும்
உயரிய விழுமங்களின்
மொத்தக் குழுமம்

தகிக்கும் பாலையில்
தவிக்கும் வேர்களுக்கான
தண்ணீர்த் தடாகம் !

கதியற்றோர் கண்ணீரைத்
துடைக்க வந்த
பூந்துவாலை !
விட்டொழிக்க வேண்டிய
வெற்றுச் சடங்குகளை
சுட்டெரிக்க வந்த
செந்தணல் சுவாலை !

எவ்வுயிரும்
ஏற்று நிற்கும்
செவ்வுயிர் !

சுருங்கச் சொன்னால்
அண்ணல் நபிகளார் அவர்கள்
இவ்வுலகிற்கு
இறைவன் தந்த கொடை
எழுத்தால்
போட முடியாத எடை !

தூரிகையால்
தீட்ட முடியாத ஓவியம் !
யாப்பதிகாரங்களால்
காட்ட முடியாத காவியம் !

வார்த்தைகளால்
சுட்ட முடியாதவர்
வானம் போல்
எட்ட முடியாதவர் !

பகை புகுந்த நெஞ்சத்தார்
பார்வையில் படாமல்
குகை புகுந்த குணாளரை
கதீஜா மணாளரை
காத்து நின்றது – ஒரு
கருஞ்சிலந்தி ! அது –
வாய் நூலால்
குகைக்கு
வாய்ப் பூட்டுப் போட்ட
அருஞ்சிலந்தி !

ஆறறிவிடமிருந்து – ஒரு
பேரறிவை
ஆன்றறிவில்லாத ஒரு
மூன்றறிவுக் காத்தது
அதனால் அதற்கு
அழியாப் புகழ் பூத்தது !

நபிகளார் பற்றி
நாளெல்லாம் சொல்லலாம்
சொல்லச் சொல்ல
இன்னும்
சொல்லாததாய் இருக்கும்
சொல்லலாம் !

 - நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007

News

Read Previous

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக !

Read Next

புத்தாண்டு வருகவே ! புத்துணர்வை தருகவே !

Leave a Reply

Your email address will not be published.