முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக !
முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக !
முத்தான வருடத்தின் முதன்மை தனிலே
முஹர்ரம் திங்கள் விளங்கிடும் !
தியாகச் செம்மல் உயிர்நீத்திட்ட நினைவை
தீனிற்கு எடுத்துச் சொல்லிடும் !
அமைதியும் நிலவிடும் ஆஷுரா தினமும்
அதனுள் அமைந்தே இருந்திடும் !
இறையருள் பெற்றிடவே இமாம் ஹுஸைன்
இன்னுயிர் நீர்த்தது நினைவூட்டும் !
ஏக்கமும் நிறைந்த கண்களும் கலங்கி
எஜீதுபடை செய்தது வெறுத்திடும் !
கர்பலா களத்தினது அகோரக் காட்சியை
கண்முன் நிறுத்தி உணர்த்திடும் !
உலகமக்கள் உடன்பிறப்பு என்ற உணர்வு
நமக்கு முஹர்ரம் அளித்திடும் !
முத்தான புத்தாண்டு முஹர்ரமே வந்திடுக
முழுமையான அருளைத் தருக !
செம்மையான முஹர்ரம் மாதமே பிறந்திடுக
செழுமையான வாழ்வை தருக !
அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் வருகவே
அகத்தினில் அழுக்கினை நீக்குக !
இனிய மார்க்கமாம் இஸ்லாத்தை அறிந்திட
இங்குள்ளோர் தெரிந்திட செய்க !
சன்மார்க்க நெறி தழைத்தோங்க இவ்வுலகில்
சகலோரும் புரிந்திட அருள்புரிக !
புன்னகை கொண்டு பொலிவுடன் வாழ்ந்திட
புத்தாண்டே இனிதே வந்திடுக !
இருக்கும் போட்டியும் மோட்டியும் மறையவும்
இன்னாளில் அமைதி அளித்திடுக !
மற்றவர் தமக்கு தீங்கிழைக்காத நல்லதொரு
மனதை எங்களுக்கு தந்திடுக !
ஒருவரை யொருவர் மதித்துமே வாழ்ந்திட
ஒற்றுமையை எமக்கு ஈந்திடுக !
அடக்கம் ஒழுக்கம் அன்புநிலவ இறைவா !
அகிலம் முழுதும் அருள்புரிந்திடு !
இந்திய திருநாட்டின் குடிமக்கள் யாவரும்
இனிதாய் வாழவும் செய்திடு !
கவிஞர் ஆசுகவி
கொடிநகரான் E. M. ஜிப்ரில்.