வாலிபக்கவிஞர் வாலி
வாலிபக்கவிஞர் வாலி
திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன் அவ்வூர்
அரங்கநாதன் அருளாலே ,கவியரங்கங்கள்
கருத்தரங்கங்கள், திரையரங்கங்கள் என்
அனைத்தரங்கங்களிலும் ஜொலித்து
மக்களின் மனவரங்கத்தில் தனக்கொரு
தனியரங்கம் அமைத்துக்கொண்டார் . .
மயக்கமா ! கலக்கமா ! பாடலைக் கேட்டதால்
மதுரைக்குச் செல்லாமல் சென்னை வந்தார்
அத்தைமடி மெத்தையடி பாடலில் துவங்கி
வித்தகனாய் திரையுலகில் விளங்கி நின்றார் .
எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வரவேண்டுமென
கருதியே வாலியென்று பெயர் புனைந்தார்
எதிரிகளே இல்லாமல் எளிதில் அனைவரையும்
இனிமையாய்ப்பழகி நண்பர்களாக்கி வைத்தார் .
ஓவியம் பயிலவே சென்னைக்கு வந்த அவர்
காவியங்கள் படைத்துவிட்டார்- தமிழில்
கலைஞர் காவியமும் , ராமானுஜ காவியமும்
கவிதையின் வடிவிலே கவினுறப்படைத்துவிட்டார் .
மையோடு எழுதுகோலில் , மையலையும் சேர்த்து
மனங்கவர் பாடல்கள் படைத்ததனால் – அவரை
திரையுலகினர் எல்லாம் வாலிபக்கவியென்று
செல்லமாய் அழைக்கும் சிறப்படைந்தார் .
எண்பத்திரண்டு வரை கவிதைகள் , நூல்களொடு
எண்ணற்ற பாடல்கள், எழுதியே குவித்துவிட்டார்.
மண்ணுலகில் தனது கவிப்பணி முடிந்ததென
கண்ணதாசனைத்தேடி விண்ணுலகம் சென்றுவிட்டார் .
எண்ணத்தில் நிலைத்துநிற்கும் வாலியின் புகழ்
திண்ணமாய்த் திரையுலகில் நிலைத்து நிற்கும் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்