திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மீகம் !
-கவிஞர் மு.ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி
இந்த உடல் உயிர் நமக்குச் சொந்தமல்ல
இருக்கின்ற இவ்வுலகும் நிலையும் அல்ல
வந்த இட முகவரிக்கே திரும்பிச் செல்லும்
வரையோலைக் கடிதம் நாம், ஆமாம் உண்மை !
எந்தவோர் நம் செயலும் தவறா வண்ணம்
இறையவனின் லெளஹுல் என்னும் ஏட்டினிலே
விந்தையாய்ப் பதிகிறது எண்ணிக் கொள்வீர் – தீனின்
வெளிச்சத்தில் இறைமேன்மை கண்டு கொள்வீர் !
கண்ணிற்குத் தெரியாமல் ரூஹ் ஓர்நாள்
கைதாகப் போகிறது என்ன செய்வோம்?
மண்ணாண்டு மனையாண்டு என்ன யிங்கே
மதியாண்டு நிதியாண்டு வந்த நம்மை
விண்ணாண்டும் மண்ணாண்டும் இருக்கும் மேலோன்
விசாரணைக் கைதியாய் அழைத்துப் போவான் !
பொன்னாண்ட புகழாண்ட மன்னர்கூட – இறைப்
பேரரசின் முன்னாலே பணிந்தே நிற்பர் !
வாழ்கின்றநாளேனும் நன்மை செய்து
வல்ல இறைஉவப்பை நாம் பெறுவோமாக !
சூழ்கின்ற துயர்கண்டு அஞ்சிடாமல்
தொழுகையிலே துஆவிலே வெல்வோமாக !
நாள், வார, மாதமென்று நகரும் காலம்
நல்அமலை அதற்குள்ளே நிறையச் சேர்த்து
ஆலம் படைத்தாளுகின்ற பெரியோன் அல்லாஹ்
அருளன்பில் நாமெல்லாம் திளைப்போமாக !
நன்றி :
இனிய திசைகள்
பிப்ரவரி 2014