உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தை காக்கலாம்
சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான அளவு உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஸேப்பியன் நல அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார்.
ஸேப்பியன் நல அறக்கட்டளை சார்பில் உலக சிறுநீரக தினம் சென்னையில் புதன்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் பேசியதாவது:
சிறுநீரக செயலிழப்புக்கு சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் பொதுவான காரணிகளாகும். இந்தியாவைப் பொறுத்தவரை உணவில் அதிகமான உப்பு சேர்த்துக் கொள்வதும் ஒரு முக்கியக் காரணமாகும். அன்றாட உணவில் நாம் சேர்க்கும் உப்பின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும்.
ஒரு மனிதனுக்கு வயதாவதுபோல சிறுநீரகத்துக்கும் வயதாகும். 150 கிராமாக இருக்கும் சிறுநீரகத்தின் அளவு வயதாகும்போது 125 கிராமாக குறைந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மனிதனின் சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களின் எண்ணிக்கை 1 சதவிதம் குறையும்.
சிறுநீரகத்தின் செயல்பாட்டிலும் மாற்றம் வரும். எனவே, வயது அதிகரிப்பதற்கேற்ப தண்ணீர் குடிப்பதையும் அதிகரிக்க வேண்டும். சிறுநீரகத்தில் சோடியத்தின் அளவு குறைவாகவும், பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.
சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான அளவு உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயதாகும்போது அதிக அளவில் தேவையில்லாமல் மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, மருந்தின் அளவையும் குறைக்க வேண்டும் என்றார் ராஜன் ரவிச்சந்திரன்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா பேசுகையில்,”வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் தொற்று நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. தொற்றா நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அவை ஈடுபட்டு வருகின்றன. துரதிஷ்டவசமாக இந்தியாவில் தொற்றும் நோய்களையும் முழுமையாக அழிக்க முடியவில்லை. தொற்றா நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதன் மூலம் 60 சதவித சிறுநீரகப் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்றார்.
கார்ட்டூனிஸ்ட் மதன், திரைப்பட நடிகர் கிரேஸி மோகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.