ரயிலில் அடிபட்டு பாலிடெக்னிக்கில் பயின்று வரும் முதுகுளத்தூர் மாணவர் சாவு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பெரியகருப்பசாமி (19). இவர், அம்பாத்துரை அடுத்துள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவர் பெரியகருப்பசாமி தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு செல்வம் முதுகுளத்தூரிலிருந்து செல்போனில் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.
அப்போது, கல்லூரி காப்பாளரை தொடர்பு கொண்ட செல்வம், தேர்வுக் கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியுள்ள விவரத்தைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெரியகருப்பசாமி விடுதிக்கு வரவில்லையாம்.
புதன்கிழமை காலை, அம்பாத்துரை அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ரயிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து, ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.