அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!
அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (21.11.2018)
(முற்றிலும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த) முஸ்லிம்களும் நிச்சயமாக நம்மில் இருக்கின்றனர்; (உண்மையை விட்டுத் திரும்பிய) அநியாயக்காரர்களும் நம்மில் இருக்கின்றனர்; எவர்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகி விடுகின்றார்களோ, அவர்கள் தாம் நேர் வழியைத் தேடிக்கொண்டார்கள்.(72:14)
@நமக்கான நேர்வழி என்பது முற்றிலும் நம்மை அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து வாழக்கூடியவர்களாக மாற்றிக் கொள்வது தான்;நம்முடைய ஒவ்வொரு அசைவுகளும் அல்லாஹ்வுக்கானது என்ற அசைக்க முடியாத சிந்தனையை நமது உள்ளம் உள்வாங்கிக் கொள்ளுமானால், நமது ஈமானை எவராலும் திசை மாற்றிட முடியாது; அல்லாஹ்வும் நமது ஈமானை பாதுகாத்து விடுவான்.
இத்தகைய ஈமானின் சிந்தனையை சிறுபிள்ளையாய் இருக்கும் போதே நமது பிள்ளைகளிடம் உருவாக்கி விடவேண்டும்; இல்லையேல், இன்றைய நாசகார உலகில் அநியாயக்காரர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி திருமணம் என்னும் பெயரில் தங்களின் கற்பையும் ஈமானையும் இழந்து நிற்கும் அபலைகளை உருவாக்கிய குற்றவாளிகளாக ஒவ்வொரு பெற்றோரும் நாளை மறுமையில் இறைவன் முன்பு நிற்க நேரிடும்?
முஸ்லிமான ஒரு ஆணோ? பெண்ணோ? தங்களின் திருமணம் என்னும் சுய ஆசைக்காக பிற மதத்தவரோடு சேர்ந்து கொண்டு இஸ்லாத்தின் அடையாளத்தை இழந்தாலோ, அல்லது பிற மதத்தின் பக்கம் சாய்ந்தாலோ, நிச்சயமாக அல்லாஹ் சொல்லும் அநியாயக்காரர்கள் இவர்கள் தாம்.
கேடுகெட்ட கலாச்சாரம் சூழ்ந்து நிற்கும் இவ்வேளையில் நமது பிள்ளைகளை மார்க்க சிந்தனையோடும் அல்லாஹ்வின் அச்சத்தோடும் வளர்த்தெடுத்து அவர்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் பெற்றோர்களாய் வாழ நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.