அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!
அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (11-10-2018)
(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தாருக்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(30:21)
@இறைத்தூதர் ஆதம்(அலை) அவர்களின் விலா எலும்பில் இருந்து அவர்களின் மனைவியான ஹவ்வா(அலை) அவர்களைப் படைத்தான் இறைவன்.
மனைவி என்பவள் அந்நியரல்ல, மாறாக உனது விலா எலும்பின் ஒரு பாகம் தான் என்பதை ஒவ்வொரு கணவனுக்கும் உணர்த்திக் காட்டும் வகையில் தான் ஆதம்(அலை),ஹவ்வா(அலை) அவர்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக்கியுள்ளான் இறைவன்.
இறைவன் உணர்த்தும் இந்த பேருண்மையை நம்மில் எத்தனை பேர் உள்வாங்கி இருக்கிறோம்?நமது மனைவியர் ஒவ்வொருவரும் நமது விலா எலும்பின் ஒரு பாகம் தான் என்பதை உணர்ந்து கொண்டால் இல்லற வாழ்க்கை மகிழ்வாகவே அமையும்.
தொலைந்து போன நமது பொருள் ஒன்று மீண்டும் கிடைக்கும் போது நமக்குள் எத்தனை மகிழ்ச்சி உண்டாகுமோ? அதேப் போன்று தான் நமது திருமணத்திற்கு முன்பாக தொலைந்து போன நமது விலா எலும்பின் ஒரு பாகம் திருமணம் என்னும் பெயரில் மனைவியாக நமக்கு மீண்டும் கிடைத்து விடுகிறது.
இத்தகைய நெகிழ்ச்சியான தருணத்தை தான் இறைவன் கணவனுக்கு மனைவியை அன்பாகவும், கிருபையாகவும் அமைத்து தந்திருப்பதாக அல்குர்ஆன் மூலம் நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.
ஒவ்வொரு மனைவியரும் ஒவ்வொரு கணவனின் விலா எலும்பு என்னும் சிந்தனையோடு வாழும் சூழலை நமக்குள் ஏற்படுத்தி இல்லற வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரின் மீதும் அருள்புரிவானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.