வேன் மோதி பள்ளி மாணவர் படுகாயம்
முதுகுளத்தூர் அருகே சாக்குளம் விலக்கு சாலையில் புதன்கிழமை பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர் மீது வேன் மோதியதில் படுகாயம் அடைந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா துலுக்கங்குறிச்சியைச் சேர்ந்த மடக்கரை மகன் அருண்பாண்டி (13). பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். புதன்கிழமை அருண்பாண்டி சைக்களில் பள்ளிக்கு சென்றார்.
இந்த சமயத்தில் பொதிகுளத்தில் இருந்து வேகமாக வந்த டெம்போ வேன் நிலைதடுமாறி அருண்பாண்டி மீது மோதியது. இதில் அருண்பாண்டி தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து அருண்பாண்டியின் உறவினர் பிச்சைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் வேன் டிரைவர் சாமிதாஸ் (20) மீது முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.