விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்
முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சியில் சனிக்கிழமை விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரத்தில் விவசாயிகளுக்கு, நெல் சாகுபடி அதிக விளைச்சலுக்கான நவீன தொழில்நுட்பம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பயிர் பாதுகாப்பு, களை நிர்வாகம், உர மேலாண்மை, குறுகிய கால மாற்றுப் பயிர், வறட்சி கால மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ரிலைன்ஸ் அறக்கட்டளை திட்ட அலுவலர் ஸ்ரீகிருபா மற்றும் நேருயுகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ரிலைன்ஸ் அறக்கட்டளை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.