முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டிய நிலையில், ஒரேயொருவர் பகலில் மட்டும் பணியில் உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால், செவிலியர்கள் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சூழல் நிலவுகிறது. இதனால், விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் பெற இரவில் வருபவர்களை ராமநாதபுரம், மதுரை அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ செல்லுமாறு செவிலியர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், இம்மருத்துவமனையில் சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. முதுகுளத்தூரில் அவசர சிகிச்சைக்கென வேறெந்த பெரிய மருத்துவமனைகளும் இல்லாததால், பொதுமக்கள் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் உள்பட கூடுதலாக மருத்துவர்களை நியமித்து, அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.