அமைச்சர், எம்.பி, மா.செ. முன்னிலையில் “பளார் பளார்”..
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அதிமுக நிர்வாகியை பளார் பளார் என அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர், எம்பி முன்னிலையில் இந்த அடிதடி மோதல் நடந்தது.
முதுகுளத்தூரில் ஒன்றிய கூட்டம் அமைச்சர் மணிகண்டன், எம்.பி. அன்வர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக ஒன்றிய செயலாளருமான முருகன் வரவேற்றார். கூட்டத்தில் வெங்கலகுறிச்சி அதிமுக கிளைச்செயலாளர் முத்துமணி பேசுகையில், அனைத்து நிர்வாகிகளையும் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த முருகனின் ஆதரவாளர்கள் மற்றும் முத்துமணி ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென மேடையில் இருந்து முருகன் கீழே இறங்கி வந்து முத்துமணியின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். அவரது ஆதரவாளர்களும் முத்துமணியைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அமைச்சரும், எம்.பியும் தலையிட்டு சண்டை போட்டவர்களை விலக்க விட்டு அமைதிப்படுத்தினர். கூட்டம் தொடர்ந்து நடந்தது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ex-mla-slaps-admk-functionary-front-minister-mp-260223.html