முதுகுளத்தூர் வட்டார அளவில் ஆண்கள் இறகுப்பந்து போட்டி
முதுகுளத்தூர் ஸ்ரீகண்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில், வெள்ளிக்கிழமை வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.
இறகுப்பந்து போட்டிக்கு, பள்ளியின் நிறுவனர் கே. காந்திராஜன் தலைமை வகித்தார். போட்டியில், 14 வயது ஒற்றையர் பிரிவில் 5 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், காமராஜர் மெட்ரிக். பள்ளி மாணவர் கே. சித்தார்த் முதலிடமும், இரட்டையர் பிரிவில் அதே பள்ளியைச் சேர்ந்த கே. சித்தார்த், டி. முகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
17 வயது ஒற்றையர் பிரிவு போட்டியில் 6 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி. சந்துரு முதலிடமும், இரட்டையர் பிரிவிலும் அதே பள்ளியைச் சேர்ந்த ஏ. சேக்முகம்மது, விஜி ரிச்சர்ட் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
19 வயது ஒற்றையர் பிரிவில் 4 பள்ளிகள் கலந்துகொண்டதில், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். லபீல் நசுருல்லா முதலிடமும், இரட்டையர் பிரிவில் அதே பள்ளியைச் சேர்ந்த ஏ. கௌதமன், கே. முஜிபுதின் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியை ஆடலின் லீமா, முதுகுளத்தூர் வட்டார உடற்கல்வி அலுவலர் வி. சந்தனகவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிக்கு நடுவர்களாக, உடற்கல்வி ஆசிரியர்கள் என். கமால்பாட்சா, அன்சாரி, உசேன் ஆகியோர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை, மாவட்ட உடற்கல்வி அலுவலர் எஸ்.பிரசாத் பாராட்டினார்.