முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு: இளைஞர் கைது
முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான இளைஞரை, 2 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், இளஞ்செம்பூரைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் ராஜேந்திரன் (61). இவர், முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தார். சம்பவத்தன்று, ராஜேந்திரன் அரசு மருத்துவமனை அருகே சாலையோரம் நடந்து சென்றபோது, வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில், பலத்த காயமடைந்த முதியவரை, முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில், முதுகுளத்தூர் எம். வாகைக்குளத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சரவணக்குமார் (23) விபத்துக்குக் காரணமானவர் எனத் தெரியவந்தது. பின்னர், போலீஸார் சரவணக்குமாரை கைது செய்தனர்