முதுகுளத்தூர் அம்மன் கோயிலில் 1008 திருவிளக்குப் பூஜை
முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 39 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 1008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களின் காவல் தெய்வமாகக் கருதப்படும் இக்கோயிலில் நடைபெற்ற 1008 திருவிளக்குப் பூஜையை முன்னிட்டு, அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதையடுத்து, செல்லி அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். திருவிளக்குப் பூஜையினை, கே.ஆர். தமிழ்ச்செல்வம், முத்துலெட்சுமி ஆகியோர் நடத்தினர். ஏற்பாடுகளை, டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.