முதுகுளத்துாரில் சாலையில் வீணாகும் காவிரி குடிநீர் பொதுமக்கள் கடும் அவதி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் கடலாடி சாலை ஆப்பனூர் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்ததால் காவிரி தண்ணீர் வீணாகிவருகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.முதுகுளத்தூர் கடலாடி பகுதியில் உள்ள ஒருவானேந்தல், கடலாடி, கடுகுசந்தை, சாயல்குடி, காஞ்சிரங்குளம், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பரமக்குடியிலிருந்து ராட்சஷ குழாய்களின் மூலம் இந்த மேல்நிலைதொட்டிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. கிராம மக்கள், குடிநீருக்கும், பிறதேவைகளுக்கும் காவிரி தண்ணீரையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில் முதுகுளத்தூரில் இருந்து கடலாடி செல்லும் சாலையில் உள்ள ஆப்பனூர் பஸ் ஸ்டாப் அருகே மெயின் லைனில் வால்வு உடைத்து இரண்டு நாள்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின்பும் இந்த உடைந்த வால்வு மற்றும் குழாயினை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்,‘முதுகுளத்தூர் கடலாடி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம்தான் முக்கிய நீர்ஆதாரமாக உள்ளது.
அடிக்கடி மெயின் லைனில் உடைப்பு ஏற்படுவதால் தண்ணீர் பல நாட்கள் வீணாக தெருக்களில் ஓடி சாக்கடையில் கலக்கிறது. குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். குழாய் உடைப்பினை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.