சிலம்பாட்டம், கம்பு ஊன்றி தாண்டுதல்: முதுகுளத்தூர் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டம், கம்பு ஊன்றித் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்ட பள்ளிகள் கலந்து கொண்ட மண்டல அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்கரை மௌன்ட் சியோன் பள்ளி மைதானத்தில் நடைபெற்றன. இதில் 14 வயதிற்குள்பட்ட 50 கிலோ எடை பிரிவு சிலம்பாட்டம் போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவர் எம்.ஜான்பாவா முதலிடம் பெற்றார். இதே பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர் வி.அஜித் 17 வயதிற்குள்பட்டோருக்கான கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் முதலிடமும், உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றார். இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதையடுத்து மாணவர்கள் எம்.ஜான்பாவா, வி.அஜித் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.கமால்பாட்சா,ஜே.முகம்மது உசேன், எம்.தமிமுல்அன்சாரி ஆகியோருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான், தாளாளர் எம்.எம்.கே.எம்.காதர்முகைதீன், கல்விக் குழுத்தலைவர் எம்.காதர்முகைதீன், ஜமாத் தலைவர் எம்.எஸ்.நயினாமுகம்மது, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.