அரசு “ஆன்லைன்’ சேவை மந்தம் பட்டா கிடைப்பதில் தொய்வு
முதுகுளத்தூர்: அரசு “ஆன்லைன்’ சேவை, இரண்டு நாள்களாக மந்தமாகியுள்ளதால், பட்டா நகல்கள் பெற முடியாமல், விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
வரும் டிச., 15 ஆம் தேதியுடன், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள். விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்குரிய பட்டா நகல்கள், 10 (1) நகல்களை பெற, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். முதுகுளத்தூர் தாலுகாவில் மட்டும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் அனைவருக்கும் பட்டா நகல்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு “ஆன்லைன்’ சேவை, இரண்டு நாள்களாக முடங்கியது. தனியார் மையங்களில், பட்டா நகல்கள் எடுக்க முடியாமல், விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். முதுகுளத்தூர் தாலுகா அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரே நேரத்தில், பல ஆயிரத்துக்கும் அதிகமானோர், கம்ப்யூட்டர் பட்டா, 10 (1) நகல்கள் பெற விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு “கவுன்டர்’கள் மூலம் விவசாயிகளுக்கு, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது, என்றார்.