தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவதே தீர்வு
தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவதே தீர்வு
பொதுமுடக்கம், ஊரடங்கு நடவடிக்கைகள் கொரோனாவை தடுப்பதைக் காட்டிலும், பொருளாதாரத்திற்கு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுவதாக ‘பஜாஜ்’ ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
“கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் கொண்டுவரப்படுகிறது. ஆனால், பொதுமுடக்கம் கொரோனா பரவலைத் தடுக்கிறதோ இல்லையோ பொருளாதார மேம்பாட்டை தடுத்து விடுகிறது. ஊரடங்கு நேரத்தில் தொழில்கள் பாதிப்படைவது, வேலை இழப்புகள் அதிகரிப்பது பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஆறு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், உற்பத்தி மட்டுமல்லாமல் விற்பனையும் பாதிக்கப்பட்டது. பொதுமுடக்கம் பின்னர் தளர்த்தப்பட்டாலும் கூட 2020-ஆம் ஆண்டின் விழாக்காலத்தில்தான் நுகர்வு அதிகரித்தது. இந்த ஆண்டு இரண்டாம் அலை வேகம் எடுத்ததை அடுத்து, மார்ச் மாதம் முதல் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பொதுமுடக்கத்தை அறிவித்தன. ஏப்ரல் மற்றும் மே மாதத்தை முழுவதுமாகவே இழந்து விட்டோம். ஜூன் மாதத்தின் பாதியில்தான் ஓரளவுக்கு விற்பனை இருந்தது. பொதுமுடக்கம் போதுமான பலனைத் தரவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும், அரசுகள் பொதுமுடக்கத்தை அறிவிக்கின்றன. இதனால் பொருளாதார நிச்சயமற்ற தன்மை உருவாகி இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நகரங்களில் இருந்து மீண்டும் கிராமங்களை நோக்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இது மிகப் பெரிய பேரழிவாக மாறும்.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்குவதுதான் தீர்வு. முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். மேலும், தடுப்பூசியை வேகப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஏழைகளுக்கு உணவு கிடைக்கும். நாடும் வளர்ச்சி அடைய முடியும்.இவ்வாறு ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
(நாம் சொன்னாத்தான் மோடி கேட்க மாட்டார். தொழிலதிபர் சொல்றதையாவது கேட்பாரா..?)