புளிமாங்கனி
புளிமாங்கனி
_________________________________ருத்ரா
இந்த இறைவன் படைப்பில்
எல்லாம் இன்பமயம்.
காக்கைச்சிறகுகள் கூட
நந்த லாலாக்களின்
கிச்சு கிச்சு மூட்டல்கள்.
தீக்குள் விரல் வைத்தால்
அவனை அவளாய்
அல்லது
அவளை அவனாய்
தொட்டு மகிழ்வுறும்
இன்பக்கடல் தான்.
எனக்குள் ஒரு இதயக்கூடு செய்து
அதற்குள்
அந்த இன்சிட்டுகளின்
ரெக்கைத்துடிப்புகளை
அடைத்து வைத்து
வான மண்டலத்தையும்
வடித்து வைத்த அவன் அல்லது அது
வாழ்க வாழ்கவே!
……..
அந்தக்கட்டில் காலியாகவே கிடக்கிறது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?
மூச்சு விட்டுக்கொண்டிருந்த
அந்த நம்பிக்கையின் சுவடு மட்டுமே
அங்கே!
“நியூரான் முடிச்சுகளின்
சினாப்டிக் ஜன்க்ஷனில் உள்ள
பர்கிஞ்சே செல்களுக்குள்ளும்”
ரத்தப்புற்று நோயாம்..
அந்தக்குரல் கீச்சுகளின்
கடைச்சித்துளி வரைக்கும்
வயதுகளின் அந்த இளம்பக்கங்களுக்கு
இன்னும் முற்றும் எழுதவில்லை.
அப்படித்தான் அங்கே ஒரு
விடியாத விடிவின்
யாப்பிலக்கணத்தோடு
தேமாங்காயும் புளிமாங்கனியும்
இன்னும் கூவிளங்கனியின் கூக்குரல் ஒலிக்க
செய்யுள் துப்பிக்கொண்டு கிடந்தன!