தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சித்திரையில் பிறக்கும் தமிழ் புத்தாண்டே வருக.
நித்திலத்தில் மாந்தர்க்கு நிம்மதி நல்கிடவே வருக.
இத்தனை நாள் அனுபவித்த இன்னல்கள் மறைக
இத்தரணி முழுவதும் இனி இன்பங்கள் நிறைக .
பிலவ வருடத்தின் தடைகள் நீங்கி – வரும் ,
சுபகிருதுவில் அனைத்தும் சுபமாக நடக்கட்டும் .
கொரோனாவின் தாக்கம் குறைந்தது போலவே
வரப்போகும் வைரஸ்கள் வலுவிழந்து போகட்டும் .
முடங்கிய தொழில்வளம் முழுவீச்சில் பெருகட்டும்.
விவசாயம் தழைத்தோங்கி விளைச்சல் பெருகட்டும்.
விளைந்த பொருளுக்கு உரிய விலை கிடைக்கட்டும்.
உக்ரைன் -ரஷ்யா போரின் உத்வேகம் தணியட்டும்.
உலகையே உலுக்குகின்ற உயிர்ப்பலி குறையட்டும்.
இலங்கையில் நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையில்
விலங்கினைப்போல் மக்கள் வீழும் நிலை மாறட்டும்.
பாகிஸ்தானில் உள்ள பதட்டம் குறைந்தங்கும்
நல்லாட்சி மலர்ந்து அந்த நாடும் செழிக்கட்டும்.
எல்லை நாடுகளெல்லாம் அமைதியாயிருந்தால்தான்
தொல்லையில்லா நிலை துலங்கும் நம்நாட்டிலுமே .
போருக்குச் செலவிடும் போக்கு குறைந்து அதை
ஏருக்கும் ஏனைய வளர்ச்சிக்கும் செலவிட்டால் – உலகில்
சோ(ற்) றுக்குப் பஞ்சமின்றி சொர்க்கமென மாறும் -அது
பாருக்கு நல்லதாகும், பாரள்வோர் உணரவேண்டும்.
தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம் – மனதில்
தன்னம்பிக்கையுடன் உழைத்திடுவோம்.
தமிழகம் என்றும் தரணியிலே – அனைத்திலும்
தன்னிகரில்லா நிலை செய்வோம்.
வாழ்க தமிழ் . வாழ்க தமிழினம். வளர்க்க தமிழகம் .
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்