காலம் மாறினாலும்…
காலம் மாறினாலும்…
ஊருக்குள் சென்ற
ஒற்றையடிப் பாதை
தார்ச்சாலையாக
மாறி இருந்தது
சுரைக்கொடி படர்ந்த
கூரைவீடுகள்
ஆண்டெனாக்களை
சுமந்து நின்றன
கிளித்தட்டு விளையாடிய
பிள்ளைகள்
கிரிக்கெட் மட்டையோடு
திரிந்தார்கள்
பகலிலே நைட்டியணிந்து
தண்ணீர் பிடித்தனர்
இளம் பெண்கள்
இன்சாட் டூ பற்றியும்
இண்டர்நெட்டில் ரிசல்ட் பற்றியும்
பேசி மகிழ்ந்தார்கள்
டீக்கடைகளில்
தாழ்ந்த சாதி பிணத்தை
எங்கள் சாதியோடு
புதைப்பதா என்ற
சண்டை மட்டும்
நடந்துகொண்டே இருந்தது
எங்கள் ஊர் சுடுகாட்டில்….
– தோழர்.பால பாரதி
Tags: காலம் மாறினாலும்…