சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
சித்திரை வரும்போதெல்லாம்
உக்கிர வெயில் வருகிறதோ இல்லையோ
தமிழ்ப் புத்தாண்டு
தையிலா சித்திரையிலா என்ற
ஐயம் வந்துவிடுகிறது
சங்ககாலம்
தையைத்
தலைத்திங்கள் என்று
சொல்லிவைக்கவில்லை
அட
சித்திரையையாவது
சொல்லியதா என்றால்
அதுவும் இல்லை
முதல் மழைக்கால ஆவணியை
பருவத் துவக்கமென்றே
பறைசாற்றுகிறது தொல்காப்பியம்
ஆயினும் ஆவணியையும்
ஆண்டுப் பிறப்பென்றே
அது அறிவுறுத்தவில்லை
ஜோதிடத்தின்
முதல் ராசி மேஷ ராசியாம்
மேஷம் புகும் மாதமான சித்திரையே
வருடப் பிறப்பு என்கிறது
ஆரியரின் சமஸ்கிருதம்
தமிழர் வாழ்வியலில்
தைத்திங்களே
தமிழ்ப்புத்தாண்டு என்பது
உயர் தமிழ் அறிஞர்களின்
ஒன்றுபட்ட கருத்து
எப்படியோ
தமிழன் கொடுத்து வைத்தவன்.
அவனுக்கோ புத்தாண்டுகள்
பல
அலுவலகப் புத்தாண்டு
மார்கழியில் வரும் ஜனவரியில்
சேரநாட்டுப் புத்தாண்டு
சிங்கம் எனும் ஆவணியில்
இஸ்லாமியரின் புத்தாண்டு
முகர்ரத்தில்
சமஸ்கிருத ஜோதிடப் புத்தாண்டு
சித்திரையில்
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
தையில்
ஆயினும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற தமிழ்ப்பண்பாடு போற்றி
சித்திரையை
ஜோதிட வருடப் பிறப்பாய்க்
கொண்டாடுவோர் அனைவருக்கும்
சித்திரைத் திருநாள்
வாழ்த்துச் சாரல் தூவுவோம்
O
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
சித்திரையும் சிறப்பான
தமிழ் மாதம்தான்
பொன்னேர் பூட்டி
ஏர்மங்கலக் கோடை உழவை
முத்தொளிரும் சித்திரையின்
முதல்நாளில் தொடங்கி வைத்தால்
மகசூல் மடி நிறைக்கும்
தென்மாவட்டங்களில்
விரித்து வைத்த
வெளிச்சக் குடையாய்
வானம் தெளிந்து கிடக்க
அதில்
வட்ட நிலா வாட்டமாய்க் காய
கடலலைகள்
கட்டுக்கடங்காக் காதலோடு
கரைமணலில் காவியங்கள் தீட்ட
அறுவடை முடித்த ஆனந்தத்தில்
அமர்க்களமாய்க் கொண்டாடி
அகம் மகிழ்வான் உழவன்
நித்திரை மறந்த சித்திரை இரவுகளில்
O
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
அத்தைமகள் விழி மார்கழியும்
அமுதளக்கும் நிலத் தைமகளும்
முத்தமிடும் பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்
எத்தனையோ இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்
சித்திரமாய்ப் பண் பாடிவர
சித்திரையே நீ யாரடியோ
கத்தரியாய்த் துயர் துண்டாடி
கவிபாடும் தீப் பிழம்பரசி
எத்தனையோ இருள் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே
சித்திரையே தவப் பொற்கொடியே
சூரியனும் உன் சொற்படியே
முத்தெடுக்கும் நீள் மூச்சழகே
முறைதானே நீ பொன்மகளே
முத்துரதம் மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க
எத்திசையும் வளர் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட
சித்தர்களும் தமிழ்ப் பித்தர்களும்
சித்தமெலாம் சுடர்க் கவியேந்த
சித்திரையே நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி