யாராலே?

Vinkmag ad

யாராலே?

     – நாமக்கல் கவிஞர்சூரியன் வருவது யாராலே?
     சந்திரன் திரிவது எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல்
     கண்ணிற்படுவன அவை என்ன?
பேரிடி மின்னல் எதனாலே?
     பெருமழை பெய்வது எவராலே?
ஆரிதற் கெல்லாம் அதிகாரி?
     அதைநாம் எண்ணிட வேண்டாவோ!

தண்ணீர் விழுந்ததும் விதையின்றி
     தரையில் முளைத்திடும் புல் ஏது?
மண்ணிற் போட்டது விதையொன்று
     மரம்செடி யாவது யாராலே?
கண்ணில் தெரியாச் சிசுவையெல்லாம்
     கருவில் வளர்ப்பது யார்வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
     ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ!

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!
     எத்தனை ஊர்வன பறப்பன பார்!
எத்தனைப் பூச்சிகள் புழுவகைகள்!
     எண்ணத் தொலையாச் செடி கொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள்!
     எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த் தன்
     யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள்
     அரன் அரி யென்பார் சிலபேர்கள்
வல்லான் அவன்பர மண்டலத்தில்
     வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா  ‘நிர்வாணம்’
     என்றும் சிலபேர் சொல்வார்கள்
எல்லா மிப்படிப் பலபேசும்
     ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம் நினைத்து
     அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்
எந்தப் படியாய் எவர் அதனை
     எப்படித் தொழுதால் நமக்கென்ன?
நிந்தை பிறரைப் பேசாமல்
     நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம் அதைவணங்கிடுவோம்
     வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

                             – நாமக்கல் கவிஞர்

News

Read Previous

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்

Read Next

காலம் மாறிப்போச்சு

Leave a Reply

Your email address will not be published.