முஅத்தின்கள்

Vinkmag ad

 

(பி. எம். கமால், கடையநல்லூர் )  
 
 
ஊருக்கு இளைத்த                           
உழைப்பாளி இனம்நாங்கள் !
பாருக்குள் வீசுகின்ற
பசுந்தென்ற லைநாங்கள் 
பாங்கின் ஒலியால் 
பரிசுத்தப் படுத்துகின்றோம் !
 
நாங்கள்-
எல்லாப் பள்ளிகளிலும் 
எடுப்பார் கைப் பிள்ளைகள் !
 
கந்தலைக் கசக்கி 
உடுத்தினாலும் நாங்கள் 
ஆகாய நிர்வாணத்திற்கு 
ஆடை நெய்கிறோம் –
ஆமாம் !
பாங்கொலிப்  பட்டாடையை 
குரல்வளைத் தறியில் 
நெய்கின்ற நெசவாளி நாங்கள் !
 
பிலாலின் வாரிசுகள் 
என்பதாலோ நாங்கள் 
அடிமைகளாகவே 
ஆக்கப்பட்டுவிட்டோம் !
 
வரலாற்றில் எங்களுக்கு
 வரவேற்பு இருந்தாலும்  
வாழ்க்கை வசதிகளில் 
வறுமைபரி  சானது !
 
“வறுமையே எனக்குப் 
பெருமை”என் றோதிய 
வள்ளல் நபிகளின் 
வாரிசுகள் நாங்கள்தான் !
 
தலைவர் செயலாளர் 
தாளாளர் என்று 
ஏராளமானோர் 
 இருந்தாலும் பள்ளியின் 
வரவேற்பு எங்கள்கை 
வசத்தில் உள்ளது ! 
 
நாங்கள்தான் உங்களை 
நாயனைத்  தொழுவதற்கு 
அழைத்து வரவேற்கும் 
அலுவலைச் செய்கின்றோம் !
 
கழிவறையை நாங்கள்
கழுவினாலும் அதனை
 
 
இழிதொழிலாக எண்ணுவதில்லை !
 
எங்கள் கீழ்நிலையை 
எடுத்துச் சொல்லிவிட்டால் 
சித்திரமும் கூடச் 
சிந்தும் கண்ணீரை !
 
பள்ளிவாசலில் எங்களுக்கு 
முத்திரை இடப்பட்ட 
முதல் வரிசை; என்றாலும் 
பள்ளி நிர்வாகியைப் 
பார்க்க  நாங்கள் போனால் 
பத்துப்பேர் வாசல் 
படியில் நின்றாலும் 
கடைசி அழைப்புத்தான் 
கைகொடுக்கும் எங்களுக்கு ! 
 
போதாது சம்பளம்
என்றாலும் எங்களின் 
போதாத காலத்தை 
பொறுப்போடு எண்ணி 
கஷ்டத்துடன்தான் 
காலம் கழிக்கின்றோம் !
 
முஅத்தின்கள் எங்களை 
“மோதினார்” என்று 
இறந்தகாலச் சொல்லில் 
ஏனழைக்  கின்றீர்கள் ?
 
சில நேரம்-
குணக்கேடர் பணக்காரர் 
குடிகாரர் சிலரோடு 
மோதுவ  தால்தான் 
“மோதினார்” என்றீர்களோ ?  
 
நாங்கள் 
அல்லாஹ்வின் வீட்டு 
அழைப்பொலிக் காரர்கள் !
இருந்தாலும் சிலநேரம் 
பள்ளி    நிர்வாகப்
பணக்காரப் புள்ளிகளின் 
வீட்டு    வேலைக் 
காரர்களும் நாங்கள்தான்  !
 
காற்றைப்   பாங்கொலியால் 
கழுவித் துடைக்கும் நாங்கள் 
பள்ளி   வாசலையும் 
பக்குவமாய்த் துடைக்கின்றோம் !
 
வட்டி மூஸாக்கள் 
வாரி வழங்காத 
கருமிக் கிருமிகள் 
கள்ளுண்ணும் பேதைகள் 
ஒருநாளும் தொழுகைக்கு 
ஓடிவா ராதவர்கள் 
இப்படிச் சிலபேர் 
இருந்தால் நிர்வாகம்
எப்படிச்  சீராகும் ?
எங்கள் நிலை உயரும் ? 
 
நேர்மை தவறாத 
நிறைவான மூ மீன்கள் 
பள்ளி    நிர்வாகப் 
புள்ளிகளாய் ஆகிவிட்டால் 
எங்களின் நிலைமாறும் !
இறைவா அருள் புரிவாய் !
 
 
இறைவா ! எங்களை 
ஜக்காத்து சதக்கா 
வாங்கும் நிலைமாற்றி 
கொடுக்கும் நிலைக்கு 
கொண்டுவந்து நிறுத்து !
அப்போதும் எங்கள்பணி 
ஆண்டவா !உன்வீட்டு 
முற்றத்தில் தொடருதற்கு 
முழுதும் உதவிசெய் !
 
 

News

Read Previous

ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

Read Next

பூக்குளம் அரசு பள்ளியில் கரிமூட்டம் மாணவர்கள் பரிதவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *