பத்ர் போர் தந்த பாடம்
பத்ர் போர் தந்த பாடம்
———————————-
பதர் போர்க்களம் பதற்றமான நிலைமை
பல்லாயிரம் படையினர் அங்கே பலவீனமாய் சகாபாக்கள் இங்கே படைபலம் இல்லை பயிற்சியுமில்லை
வணிக வளம் எதிரியின் கை சென்றால்
துணிந்து தொல்லை செய்வான் என்று
வலிந்து வந்து எதிர்த்து நம்தம் வலிமை காட்ட நினைத்தால்
வந்ததோ குரேஷியர் பெரும்படை
மண்டியிட்டு அண்ணல் வல்லோனிடம்
மன்றாடி மனம் கசிந்து கையேந்தி
தாடி நனைந்து நாடி நரம்பு வீங்க
தா வெற்றியை என்று கேட்டார்கள்
இல்லை என்றால் இவ்வுலகில்
இனி உன்னை திக்ர் செய்ய
இல்லை யாரும் என்றாகி விடும்
இறைவா ! எங்கள் மீது இரக்கம் காட்டு
இரவெல்லாம் நின்று தொழுதார்கள்
இறைவனிடம் இறைஞ்சினார்கள்
இறைமறுப்பாளர்கள் மத்தியில்
இறைநேசர்கள் வாழ வேண்டினார்கள்
அபூபக்கர் வந்து ஆறுதல் சொன்னார்
அச்சம் ஏன் அண்ணலே எழுங்கள்
ஆர்ப்பரித்து களம் புகுவோம்
அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்
சிறுத்தை அலியின் வாளின் வீச்சு சிங்கம் ஹம்சாவின் தோளின் மாட்சி
வீணர்களின் தலைகள் உருளட்டும் விண்ணில் வெற்றிக்கொடி பறக்கட்டும்
இரு சிறார்கள் இடையில் வந்து பெறுவீரன் அபுஜஹில் எங்கே என
உருவாள் கொண்டு காலை வெட்டி மறுவாள் கொண்டு தலையைக் கொய்து
வன்மம் தீர்த்த வகை என்னென்பேன்
வைகறையின் வெளிச்சம் நாளை ஈமானின் விடியலைச் சொல்லட்டும்
நயவஞ்சகர் தம் சூழ்ச்சிகள் வீழ்ந்து
நல்லவர் தம் எழுச்சிகள் மிளிரட்டும்
வெண்பனி தூறலில் நுண்கதிர் வீச்சுகள்
வெற்றியைச் சொல்லட்டும்
விண்ணவர்கள் வந்து வீழ்த்திய
வீணர்கள் படை விரண்டோடட்டும்.
மனங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்
மதினாவில் புதிய ஆட்சி அமையட்டும்
மாநபியின் கொள்கைகள் வளரட்டும்
மாநிலத்தில் அமைதி நிலைக்கட்டும்
மாசிலா வாழ்வியல் சிறக்கட்டும்
கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி