நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

Vinkmag ad

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்.. (காதல் கவிதை) வித்யாசாகர்!

1
நீ –
காற்றில் அசைபவள்
கிளையுரசி உடைபவள்
விழுந்ததும் பறப்பவள்
பயணித்துக் கொண்டேயிருப்பவள்;

நான் நின்று
நீ வருவதையும்
போவதையுமே பார்த்திருக்கிறேன்;

கணினி வழி தெரியும்
கண்களிலேயே
உயிர்திருக்கிறேன்;

வாழ்வதை அசைபோட்ட படி
உன்னையும்
நினைத்துச் சிரித்திருக்கிறேன்;

வாசலை
பசியோடு திறக்கக் கேட்காமல்
சந்திக்கவேக் கேட்டிருக்கிறேன்

நீயும் சம்மதித்தாய்
பேசினாய்
பார்க்கிறாய்
இருக்கிறாய்

நீ
இருக்கிறாய் என்பதில் மட்டுமே
உயிர்த்திருக்கிறேன்..
————————————————————

2
கைதொடும்
உனதுணர்வு
மின்சாரம் கொண்டது;

பார்க்கும் தருணங்கள்
யாவும்
தவத்தை உடையது;

பேசும்
அவகாசமெல்லாம்
பாக்கியத்தைப் பொறுத்தது;

உனக்கான எல்லாமே
எனக்குத் தலைமேல்
கிரீடம் இருப்பதற்குச் சமம்!
————————————————————

3
பேச்சில்
பாதி மறைக்கிறாய்,
பேசாமலே
உயிர்த்தீ அணைக்கிறாய்,

நேசத்தின்
எல்லை விரிக்கிறாய்,
நெருங்கி என்
நிஜத்தை தொலைக்கிறாய்;

காற்றில்
பொம்மையும் பூவும்
பரிசென்கிறாய்
கடவுச்சொல்லினும் இரகசியமாகிறாய்;

பேஸ்புக்
டிவிட்டர்
ஜி-பிலஸ்
எங்கு பொத்தான்களைத் தட்டினாலும் உன் முகம் தெரியும்,
தெரியாத நாளிலென் உயிர்பிரியும்..
————————————————————

4
னக்கானச்
சொற்கள்
மௌனத்தை அணிந்தவை;

வார்த்தைகளைக் களைந்து
இதயத்தை
பார்வையால் அறுப்பவை;

காத்திருப்பிலும்
தவிப்பிலும்
நினைவுகளால் வலிப்பவை;

என்ன செய்ய
உனக்கானச் சொற்களை?

இதோ –
எழுதாமலே விட்டுவிடுகிறேன் போ..
————————————————————
வித்யாசாகர்

News

Read Previous

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

Read Next

வேலை கிடைப்பதில் தாமதமானாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது

Leave a Reply

Your email address will not be published.