நட்புநாள் வாழ்த்துக்கள்
நட்புநாள் வாழ்த்துக்கள்
புதியவர் நட்பில் , புவியது விரியும்
உறவினர் நட்பில் உள்ளம் மகிழும்,
ஊரார் நட்பில் ஊக்கம் கிடைக்கும்.
மக்களிடையே நட்புணர்விருந்தால்
மன்பதை வாழ்வு மகிழ்வுடைத்தாகும்
நாடுகளிடையே நட்புணர்விருந்தால்
நானிலமெங்கும் நன்மை பெருகும்.
உதிரபந்தம் , உறவாலன்றி
சாதி, இன ,மதம் மொழி பேதமின்றி,
கற்றார், கல்லார் வேற்றுமையின்றி,
வயது வித்தியாசமும் இன்றி ,
தகுதி பாராது வருவதே நட்பு.
தயக்கமின்றிப் பழகுதல் நட்பு.
தக்கது செய்யின் தட்டிக்கொடுப்பதும்,
தகாதது செய்யின் தட்டிக் கேட்பதும்,
தயங்கி நிற்கையில் தக்கத்துரைப்பதும்,
தன்னலமென்றும் கருதாதிருப்பதும்,
ஊறுவருங்கால் உறுதுணையாவதும் ,
உயர்வதற்கு ஊக்கமளிப்பதும் ,
உயர்ந்தபின்னும் பிரியாதிருப்பதும்,
எதிர்பார்ப்புகள் இல்லாதிருப்பதும்,
காணும்போது கலந்திருப்பதும்,
காணாதபோதும் நினைத்திருப்பதும்,
நட்பின் இலக்கணம் என்றறிவோமே .
நடப்பை என்றும் போற்றிடுவோமே ..
நட்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
30. 07.2020