ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் .
ஞாயிறு என்பது கிரகங்கள் ஒன்பதில்,
நடுவண் கிரகமாய் மிளிர்கிறது.
ஞாலத்து மற்ற கிரகங்கள் எல்லாம்
ஞாயிறைச் சுற்றி வருகிறது .
ஞாயிறு இல்லையேல் ஒ பச்சளியுமில்லை
ஞாயிறு இல்லையேல் பகலிரவில்லை.
ஞாயிறு இல்லையேல் மழையுமில்லை .
ஞாயிறு இல்லையேல் வாழ்வுமில்லை.
ஞாயிறுதானே விவசாயத்தின்
நாடித்துடிப்பு எனவாகும்.
ஞாயிற்றின் கதிர் சக்தியினாலே
சூரிய மின்சக்தி கிடைக்கிறது.
ஞாயிற்றிடம் ஒளியை வாங்கி
சந்திரன் இரவில் ஒளிர்கிறது.
ஞாயிறு என்பது முதலா ,கடைசியா,
கேள்வி இங்கே எழுகிறது.
நாள்காட்டிகள் இதனை ஏனோ
சிவப்பு நாளாய் காட்டுகிறது.
உழைக்கும் மற்ற ஆறுநாட்களை
கருப்பு நாளாய் காட்டுகிறது .
அலுவலகங்களும்,பள்ளிகளும்
இதை வாரக் கடைசி என்கிறது.
ஞாயிற்றுக் கிழமை , ஓய்வு தேடும்
மானிடர் தமக்கு வரமாகும்.
திங்கள் முதலாய் உழைப்பதற்கு
ஞாயிறு ஓய்வே உரமாகும்.
ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தலைவிக்கு
கூடுதல் வேலைப்பளுவாகும்.
ஞாயிற்றுக்கிழமை வெளியே போனால்
கூடுதலாக செலவாகும் .
ஓய்வு பெற்ற முதியோருக்கு
வாரம் முழுவதும் ஞாயிறன்றோ.
கடந்த வாரக் குப்பைகளை எல்லாம்
கூட்டிக், கழிக்கும் நாளாகும்.
அடுத்த வாரத்தேவைகளுக்கு
திட்டம் வகுக்கும் நாளாகும்.
உறவினர்,நண்பர்களுடன் சேர்ந்து
உற்சாகம் பெருக்கும் நாளாகும்.
குடும்பத்தோடு வீட்டிலிருந்து
கூடிக் களிக்கும் நாளாகும்.
நிலுவையில் இருக்கும் பணிகளையெல்லாம் ,
நிறைவு செய்யும் நாளாகும்.
ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்
ஞாலம் காக்கும் ஞாயிறு போற்றுதும்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்