சிரிக்கப் பழகவேணும்!
காலையில் அழலாமோ பாப்பா?
******************(கவியோகி வேதம்)
அழுது புரளாதே பாப்பா!-காலையில்
..அழுது புரளாதே!
அழுது புரள்கிறதா மைனா-உன்போல்
..அரற்றித் திரிகிறதா?..(பாப்பா!அழுது..)
..
காலை எழுந்ததும் பாப்பா!-வெளியில்
..காற்றை நுகர்ந்திடடீ!
தோலுக்கு நல்லதடீ -பாப்பா!
..துணிச்சல் கொடுக்குமடீ!
..
காலையில் மாமரக் குயில்கள்பார்!-அழகாய்
..கானம் இசைக்குது பாரடீநீ!
சோலையில் உள்ள பறவையெல்லாம்-ஆகா!(பாப்பா!)-
..சுற்றிவிளை யாடுதடீ!
.
தூங்கி எழுந்ததும் அழலாமோ?-பாப்பா!
..துக்கிரி என்றுனை அழைப்பரடீ!
வாங்கிக் குடித்துப்பாலை,- பின்பு
..வாசலில் பறவைகள்பார்!
.
மயில்கள் ஆடுதல்பார்!தெருவில்-பசுவும்
..மகவுக்கு ஊட்டுதல்பார்!
ஒயிலாய்க் கோழிக.ளும் அதோ!-குப்பையில்
..உணவைத் தேடுதல்பார்!
..
நாய்களும் வால்குழைத்து வந்தே-உன்னிடம்
..நல்ல’பிஸ்கட்’ கேட்கலையோ?
பாய்கிற ஆட்டுக்குட்டி-உன்றன்
..பாதத்தை நக்கலையோ?
..
படுக்கையை விட்டெழுந்து பாப்பா!-நல்ல
..பழக்கமே கொள்ளவேணும்!
துடுக்குத் தனம்-விட்டுநீ-என்றும்
.. சிரிக்கப் பழகவேணும்!-பாப்பா!
..சிரிக்கப் பழகவேணும்!
****************(கவியோகிவேதம்)