கவிதையும் கற்பனையும்
கருத்தை விதைத்திடும் சொல்லலங்காரம்
கவிதை என்பதை நாமறிவோம் .
விதைத்த கருத்து விருட்சமானதா
விஷமானதா , வீணானதா என்றறிவோமோ .
புதுக் கவிதையோ , மரபுக்கவிதையோ
அது அதற்கென ஓர் இலக்கணமுண்டு
இலக்கணம் இல்லாக் கவிதை எதுவும்
இலக்கியம் என்று ஆனதில்லை .
கற்பனைக்கெந்த எல்லையுமில்லை
இலக்கணமில்லை , இலக்குமில்லை
சொல்லலங்காரம் தேவையில்லை
சுவைபடச் சொன்னால் களங்கமில்லை
கற்பனை என்பதில் உவமானங்களும்
உவமேயங்களும் உள்ளடங்கும் – நம்
உவமானத்திற்கு வெகுமானம் கிடைத்ததா
அவமானம் கிடைத்ததா அறிந்திடல் வேண்டும்
எப்பொருள் பற்றிய கற்பனைஎனினும்
எதுகை ,மோனையுடன் படைத்தால்
கற்பனையும் கவிநயமும் இணைந்தால்
நற்பெயர் கிடைக்கும் கவிஞனுக்கு .
விற்பனை நோக்கில் விரசம் படைத்தால்
அற்பன் என்றழைக்கும் அகிலமெலாம் .
கற்பனை என்பது அனைவருக்கும் வரும்
கவிதை அப்படி வாராது காண் .
கற்றலும் , பயிற்சியும், முயற்சியும் இணைந்தால்
கவிஞனென்றேற்கும் கவியுலகம் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
22.12.2014