இறைவனை வெல்ல முடியுமா ?
ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ
பிறந்தவனை இறந்திடாமல் வைக்கவும் முடியாது !
பிறந்தவனின் வாழ்நாளைக் குறிக்கவும் முடியாது !
இறந்தபின்னே உயிர்கொடுத்து எழுப்பவும் முடியாது !
இறைவனுக்கு இணையாக எதுவுமே முடியாது !
பிறந்தமனிதன் செல்வந்தனா ? சொல்லவும் முடியாது !
பணமில்லாத எளியவனா ? கூறவும் முடியாது !
நிறைந்தசுகம் கொண்டவனா ? நினைக்கவும் முடியாது !
நாயன்விதியை எவரினாலும் கணிக்கவும் முடியாது !
அறிவுக்கீர்த்தி உள்ளவனா ? அறியவும் முடியாது !
அகிலம்புகழும் நல்லவனா ? தெரியவும் முடியாது !
புரியும்போரில் வல்லவனா ? புரியவும் முடியாது !
படைத்தயிறைவன் ஒருவனன்றி விளங்கவும் முடியாது !
வாய்திறந்து பேசுவதை நம்பவும் முடியாது !
வாய்ச்சொல்லைக் கேட்பதையும் நம்பவும் முடியாது !
தாய்ச்சொல்லில் வாழுவதைச் சொல்லவும் முடியாது !
தகுதியுள்ள இறைவிதியை வெல்லவும் முடியாது !
தீன்வழியில் நடப்பவனா ? சொல்லவும் முடியாது !
தீயவழியில் செல்பவனா ? மாற்றவும் முடியாது !
வீண்வழியில் நிற்பவனா ? தடுக்கவும் முடியாது !
வாழ்வைக்கும் இறைவனன்றி கொடுக்கவும் முடியாது !
மனுகுலத்து வாழ்வுதனை அறியவும் முடியாது !
மனிதவாழ்வை மனிதனாலே அமைக்கவும் முடியாது !
மனிதரெல்லாம் இறைவிதியை வெல்லவும் முடியாது !
மனிதனாலே இறைவனையும் வெல்லவும் முடியாது !
( குர்ஆனின் குரல் மார்ச் 2013 இதழிலிருந்து )
முதுவை கவிஞர் எழுதிய இறுதிக் கவிதை