அதிசயங்கள் ஆயிரம்
-முத்தமிழ்ச் செல்வர்
கவிஞர் சீர்காழி இறையன்பனார்
தென்றல் வீசும் தென்னையில்
தேனினும் இனிய இளநீரும்
தேங்கியிருப்பது எப்படி?
சிறிய நல் விதையினுள்ளே
இமயம்போல் ஆலமரமும்
அடங்கியிருப்பது எப்படி?
சிலந்திப் பூச்சி
செலவில்லா வீட்டைச்
சிரமத்துடன் கட்டியே
தாஜ்மஹாலாய் ஆக்கியது எப்படி?
கருவில் வாழும் உயர்குழந்தை
காலம் நேரம் தவறாமல்
உணவு பெறுவது எப்படி?
பாறைக்குள்ளே தேரைக்கு
உணவு கிடைப்பது எப்படி?
உப்புநீரை தினமும் குடித்து
உயரச் செல்லும் கரிய மேகம்
உண்ணும் நீரைத் தருவது எப்படி?
உலகில் இதுபோன்ற
எத்தனையோ அதிசயங்கள்
இறைவன் அளித்திட்ட
அழகிய அற்புதங்கள்
அனைத்துப் படைப்புகளிலும்
அர்த்தங்கள் ஆயிரம்
அறிந்திடும் மானிடரே
அறிவுடன் வாழ்வீரே உலகத்தில் !