பேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி போலி கணக்குகள்
ஐதராபாத், 5 மே- உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கில் மட்டும் 10 கோடி பேர் போலி கணக்குகளைக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் பிரசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் போலி கணக்குகள் வைத்திருப்போரின் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் நிபந்தனை படி, ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பது விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது. ஆனால், உலகம் முழுவதும், நாளுக்கு நாள் போலி கணக்குகள் வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மட்டும் உலகம் முழுவதும் போலி கணக்கு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 15% அதிகரித்து 10 கோடி வரை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில் கைத்தொலைப்பேசி வழி பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 34% அதிகரித்து 75 கோடியிலிருந்து 100 கோடி வரை அதிகரித்துள்ளது. இந்தியா, பிரெசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் அதிகமானோர் கைத்தொலைப்பேசி வழி பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.