முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடியில் சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை வியாழக்கிழமை அதிகாரிகள் அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் குணாளன் தலைமையில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் ரவிந்திரநாதன், டி.எஸ்.பி. நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி ஆகியோர் முன்னிலையில் நீதி மன்றத்தில் இருந்து யூனியன் அலுவலகம் வரை சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் மேற்கூரைகள், சிமெண்ட் தளங்கள், ப்ளக்ஸ் போர்டுகள், பேனர்கள் ஆகியவற்றை ஜெ.சி.பி. இயந்திரங்கள்மூலம் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது மண்டல துணை வட்டாட்சியர்கள் சதீஷ், இந்திரா, சர்வேயர் செந்தூரான், வருவாய் அலுவலர்கள் முருகராஜ், முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பூமுருகன், இன்ஸ்பெக்டர்கள் முதுகுளத்தூர் சதீஷ், கீழத்தூவல் ரவிச்சந்திரன், கடலாடி மோகன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலாடி: வட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையில் காவல் நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை உள்ள கடைகளின் மேல்கூரைகள், சிமெண்ட் தளங்கள், ப்ளக்ஸ் போர்டுகள், பேனர்கள் போன்றவை ஜெ.சி.பி. இயந்திரங்கள்மூலம் அகற்றப்பட்டன.
சாயல்குடி: வட்டாட்சியர் ரவிக்குமார், கீழக்கரை டி.எஸ்.பி. சிவசங்கர் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் அபுல்கலாம் ஆசாத், பேரூராட்சி தலைவர் ராஜலெட்சுமி கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகளை இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
கடைகளை அகற்றும் போது போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.