புலவர் என்பவர் யார்?
வணக்கம்: _/\_
சென்ற சில தலைக்கட்டுகளுக்கு
முன்பு வரை இருந்திருந்த.. புலவர் (புலமை) அல்லது வித்வான்/வித்துவான்
(வித்தை) என்கிற தமிழ் பண்டிதர் பட்டப்படிப்பு.. கலைக் கல்லூரிகள்
உருவான பிறகு இளங்கலை இலக்கியம் (B.Litt.,) என்று மாறிப் போனது..
என்பார்கள்..?
பண்டைய திண்ணை பள்ளிகளைப் போலவே பல்லாயிரக்கணக்கான இலக்கண இலக்கிய
வரிகளை.. பாடுபட்டு பாடம் பண்ணி.. புலவர் பட்டம் பெற்றவர்களில்
குறிப்பிடத் தக்கவர்களுள் ஐயா பாவாணர் அவர்கள் ஓலைவலசு புலவர் குழந்தை
அவர்கள் போன்றவர்களைக் குறிப்பிடலாம்..?
அவ்வாறே.. பாரதி சுப்பிரமணிய ஐயரவர்கள் காலத்தில்.. F.A. (not B.F.A.?)
என்கிற பட்டப்படிப்பு ஒன்று இருந்ததாகவும் கேள்வி..!?
மிக்க நன்றி..!
அன்புடன்…/பூபதி
_____________________
1960 களில் “தமிழ் வித்வான்” என்ற படிப்பு இருந்தது, பள்ளிகளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிய இந்த வித்வான் படிப்பு தேவை.
1967 களில் கழக ஆட்சி துவங்கியதும், தொடர்ந்து வந்த காலத்தில் இதே படிப்பு புலவர் எனப் பெயர் மாற்றம் கொண்டது.
வித்வான் படிப்பிற்கு எனப் பதிந்து, படித்து தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் இடைக்கால நிலையில் இருந்தவர்களுக்கு, அவர்கள் தகுதி பெற்றதும் புலவர் பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் புலவர் என்றே முற்றிலும் கல்விமுறை அறியப்பட்டது, வித்வான் என்ற பெயர் மறைந்தது.
எனவே தகுதிப் பெற்ற முறையில் படித்து பட்டம் பெற்ற பட்டங்கள் வித்வான் என்பதும், புலவர் என்பதும்.
(ஒரு சிலருக்கு இப்பட்டங்கள் கௌரவப் பட்டங்களாகவும் வழங்கப்படிருக்கலாம் அல்லது சிலர் தானே கூட தங்களுக்கு வைத்துக் கொண்டிருக்கலாம் இவற்றிக்கும் வாய்ப்பிருக்கிறது.)
ஆனால் தகுதிச் சான்றிதழ் இருந்தால்தான் தமிழாசிரியர் பணி கிடைத்திருக்கும்.
பிறகு இப்படங்கள் பெற்றவர்கள் மேல் படிப்பு படிக்க உதவுவதற்காக (பல்கலைகழகங்களில் முதுகலை தமிழ் படிக்க இளங்கலை பட்டம் தேவை), மேலும் சில தாள்கள் தேர்வெழுதி B.Litt பட்டம் பெற்றுக் கொள்ள வழி வகுக்கப்பட்டது.
இதனால் தமிழில் M.Litt மற்றும் M.A பட்டம் படிக்க விரும்புவோர் இவ்வழியாக மேற்கல்வியினைத் தொடர்ந்தார்கள்.
கரந்தை தமிழ்ச் சங்கம் புலவர் பட்டம் பாடத்திட்டம் கொண்டிருந்ததாகவும், அதனை தமிழில் ஆர்வம் கொண்ட என் அப்பா தனிப்பட்ட முறையில் படித்து திருச்சி Saint Joseph கல்லூரியில் சென்று புலவர் தேர்வு எழுதினார், பின்னர் B.Litt ம் எழுதினார் என்ற ஞாபகம். அத்துடன் அவர் இந்த வித்வான்-புலவர் இடைக்கால நிலையையைச் சந்தித்தவர் என்றும் நினைக்கிறேன்.
(பிறகு அப்பா மதுரை பல்கலையில் அஞ்சல் வழியில் முதுகலை பட்டம் பெற்றார், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைகழகம் வந்த பின்னர் தனது ஐம்பது வயதை நெருங்கும் சமயம் அவசர அவசரமாக முனைவர் படிப்பிற்கும் பதிந்து ஆய்வு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். . 50 வயதிற்கு பிறகு பதிவு செய்ய முடியாது என்று சொன்னதாக நினைவு.)
இதை நினைவில் இருந்து எழுதுகிறேன்.