ரமளான் சிந்தனைகள் – குர்ஆனும் கல்வியும்
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com
முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் இதுதான் “உம்மை படைத்த இறைவனின் படிப்பீராக என்பதுதான் .அந்த வசனத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து வரும் வசனங்கள் படிப்பு ,எழுத்து,எழுதுகோல் ஆகியன குறித்தும் அவற்றைக் கொடுத்த படைப்பாளானாகிய அல்லாஹ் பற்றியும் பேசுகிறது
இதோ அவை “அவன் இரத்தக் கட்டியில் இருந்து மனிதனை படைத்தான்,படிப்பீராக உமது இறைவன் மாபெரும் கொடையாளி,அவனே எழுதுகோலை கொண்டு கற்றுக் கொடுத்தான்,மனிதனுக்கு அவன் அறியாதவையெல்லாம் கற்றுக் கொடுத்தான் (சூரா அலக் (96:1-5)“
நபி (ஸல்) அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஒவ்வொரு முஸ்லிமும் கல்வி கற்பது கடமையாகும் என்றார்கள் .
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று நபியே! நீர் கூறுவீராக’
என்று பேசும் குர்ஆன் “ கல்வி கொடுக்கப் பட்டோருக்கும் ஈமான் கொண்டோருக்கும் பல படித்தரங்களை உயர்த்துவான்” என்று கல்வியாளர்களுக்கு சுபச் செய்தி கூறுகிறது.
நாம் எல்லாம் தெரியும் என்று ஆணவமோ இதை எப்படி இந்த வயதில் கற்பது .இதை எப்படி பிறரிடம் கேட்பது என்று வெட்கமோ படக்கூடாது .இமாம் முஜாஹித் கூறுகிறார்கள் “யார் தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று நினைக்கிறாரோ அல்லது தெரிந்துக் கொள்ள வெட்கப் படுகிறாரோ அவர் முழுமையாக கல்வியை அடைய முடியாது .
இந்த உலகில் யாரும் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று சொல்லி விட முடியாது.
அல்லாஹ் கூறுகிறான் “ஒரு அறிவாளிக்கு மேல் இன்னொரு அறிவாளி இருக்கிறான்” என்று.
எல்லாம் தெரிந்தவன் அல்லாஹ் ஒருவனே “.அவன் எல்லா விஷயங்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்” எனக் குர்ஆன் கூறுகிறது.
மூஸா நபியிடம் அவரின் சமூக மக்கள் எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் யார் எனக் கெட்ட போது தான்தான் என்று அவர்கள் பதில் கூற அல்லாஹ் அவர்களுக்கு அப்படிக் கூறக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக கிள்று (அலை) என்ற இறைத்தூதர் அவர்களை சந்தித்து பாடம் பெறுமாறு பணித்ததும் அவர்கள் பயணம் செய்து அவர்களை சந்தித்ததும் வரலாறு.
இவ்வுலகில் மனிதனின் அறிவு எவ்வளவு படித்தாலும் அது மிகவும் குறைவே.நிறைவானதாக அது ஆகி விடாது.
அல்லாஹ் கூறுகிறான் “ நீங்கள் மிகவும் குறைந்த அறிவே அன்றிக் கொடுக்கப் பட வில்லை .
கல்வி சில புத்தகங்களை சில காலம் படிப்பதைக் கொண்டு மட்டும் வந்து விடாது .அதற்காக காலங்களை நாம் செலவழிக்க வேண்டும் .
நபி அவர்களை சுற்றி தோழர்கள் எப்போதும் அருகில் அமர்ந்து மார்க்க விளக்கங்கள் கேட்பது, குர்ஆனை மனனம் செய்வது என கல்வி கற்பதில் தங்களை அர்ப்பணித்து இருந்தார்கள். இவர்கள் “ அஸ்ஹாபுஸ் ஸுப்பா” திண்ணை தோழர்கள் என்று அழைக்கப் பட்டனர்.
நாம் அல்லாஹ்விடம் கல்வி அறிவு அதிகரிக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.அல்லாஹ் நம்மை இப்படி பணிக்கிறான் “ என்னுடைய இரட்சகனே எனக்கு கல்வி ஞானத்தை அதிகரிப்பாயாக என்று பிரார்த்திக்குமாறு குர்ஆன்
அதே போன்று கல்வியின் நோக்கம் நாம் எதை கற்றோமோ அதை செயல் படுத்துவது அதாவது அமல் செய்வதே ஆகும்.எனவே நாம் என்ன கற்றோமோ அதன் படி அமல் செய்ய வேண்டும் .
கற்றப் படி அமல் செய்யாமல் இருப்பது அல்லாஹ்வின் கோபத்தை பெற்று தரும் விசயமாகும் .
எனவேதான் நபி அவர்கள் யா அல்லாஹ் பயனற்ற கல்வியை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக என பிரார்த்தனை செய்தார்கள்.
நாம் கற்றதை மற்றவர்களுக்கும் எத்தி வைக்க வேண்டும் .
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே” என்று
தம்மிடம் மார்க்க விளக்கம் பெற்ற தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் “என்னைப் பற்றிய ஒரு செய்தி தெரிந்தாலும் அதை மக்களுக்கு எத்தி வையுங்கள் “ என்றார்கள்.
கல்வி கற்பதின் மிக முக்கிய அம்சங்கள் மிக நீண்ட பிரயாணங்கள், முயற்சி செய்வது ,கேள்வி கேட்பது ,மனனம் செய்வது ஆகியன ஆகும் .
குர்ஆனின் வசனங்கள் பெரும்பாலும் மனிதர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலே ஆகும் .
இப்படி ஆரம்பிக்கும் நபியே அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் ,நீர் கூறுவீராக என்று .
அழகிய கேள்விகள் கேட்பது அறிவில் பாதியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
மனனம் செய்வது மற்றவர்களிடம் கேட்கும் மற்றும் படிக்கும் விசயங்களை நாம் மனதில் வைத்து பாதுகாத்து செயல் படவும் மற்ற மக்களுக்கு கல்வியை கொண்டு செல்லவும் உதவுகிறது .
சஹாபாக்களும்,தாபியீன்களும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மனனம் செய்திருக்காமல் இருந்திருந்தால் இது வரை நம்மிடம் மார்க்கம் வந்திருக்காது.
எவ்வளவோ மக்கள் நபி அவர்களிடம் விஷயங்கள் தெரிந்துக் கொள்வதற்காக மிக நீண்ட தூரம் பிரயாணம் செய்து வந்திருக்கிறார்கள்.
மூஸா நபி (அலை ) கிள்று (அலை) அவர்களிடம் கல்வி ஞானம் பெற செய்த பிரயாணம் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இமாம் புகாரி (ரஹ் ) பதினாறு ஆண்டுக் காலங்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை சேகரிக்க பல நாடுகளுக்கு பிரயாணம் செய்திருக்கிறார்கள்.
பத்ரு யுத்தக் கைதிகள் தங்களை விடுவித்துக் கொள் வதற்கு செலுத்த வேண்டிய பணத்திற்குப் பகரமாக, பத்து முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டுவதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையைப் பெற்றுக் கொள்ளட்டும் என இறைத்தூதர் கூறினார்கள்.
கல்வி ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும்.நாம் பேசுகின்ற,பின் பற்றுகின்ற பெரும்பாலான ஹதீஸ்கள் ( நபிமொழி மற்றும் வழி ) நபி தோழர் அபூஹுரைராவுக்கு அடுத்து அதிகமாக அறிவித்தவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே ஆவர்.பாத்திமா பிஹ்ரி என்ற மொராக்கோவின் முஸ்லிம் பெண்மணியால் கி பி 859 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட அல் –கரவியின் பல்கலைக் கழகம் உலகில் முதலில் பட்டம் வழங்கும் முறையை கொண்டு வந்த பல்கலைக் கழகமாகும்.ஐ நாவின் யுனெஸ்கோ அமைப்பு உலகிலேயே மிகப் பழமையான பல்கலைக்கழகம் என அறிவித்துள்ளது.கின்னஸ் புத்தகத்திலும் இது பதியப் பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
ஹிஜாஸ் மாகாணத்தின் மதீனா,இராக்கின் பாக்தாத்,ஸ்பெயினின் கார்டோபா,எகிப்தின் கெய்ரோ என இஸ்லாமிய உலகின் நகரங்கள் கி பி எட்டாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை கல்வி ஒளியை உலகிற்கு பாய்ச்சின.
குர்ஆன் ஏற்ப்படுத்திய கல்விப் புரட்சி மூலம் எகத்துவம் ஒழுக்கம், அமைதி, நாகரீகம்,விஞ்ஞான வளர்ச்சி என நேரடியாகவும் மறைமுகமாகவும் மனிதகுலம் அடைந்த பயன்கள் ஏராளம்,ஏராளம்.