வாக்காளர்களை ஏமாற்றும் தேர்தல் முறை
வாக்காளர்களை ஏமாற்றும் தேர்தல் முறை
–நவநீதன்
“அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிற வாக்காளர்களால்தான் மிகச் சிறந்த மக்களாட்சி சாத்தியமாகும்”
–தாமஸ் ஜெபர்சன்
இந்திய யூனியன் 1950ல் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரை பதினேழு மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய உயிர்நாடியாக தேர்தலும், வாக்காளர்களும் விளங்குகின்றனர். அதிகாரத்தின் மையத்தைத் தொடத் தேர்தல்தான் அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமான பாதையாக உள்ளது. இன்றைய யுகத்தில் வாக்காளர்களை தங்களுக்கு சார்பானவர்களாக மாற்ற எந்த மாதிரியான வேலைகளை அரசியல் கட்சிகள் செய்கின்றன என்பதை விளக்கும் ஒரு முழுமையான ஆவணத் தொகுப்பாகும் “இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?” என்ற நூல். பாஜகவின் தேர்தல் அலோசகராக இருந்த சிவம் சங்கர் சிங் ஆங்கிலத்தில் எழுதிய இந்த நூல், இ.பா.சிந்தன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
உலகமயத்திற்குப் பின்னான உற்பத்திமுறை மக்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாறுதல்களை கொண்டுவந்து, அதிதீவிரமான நுகர்வாளர்களாக மக்களை மாற்றியுள்ளது. தொடர்ச்சியான விளம்பரங்களின் மூலமும், பரப்புரைகளின் மூலமும் ஒரு பொருளின் மீதான மோகம் மக்களிடையே உருவாக்கப்படுகிறது. அந்த பொருள் தேவையற்றதாயினும் தொடர் விளம்பரப்படுத்துதல் மூலம் அதை வாங்க மக்களின் மனநிலையை மாற்றுவதில் இந்த பரப்புரைகள் வெற்றியடைந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அதை சாத்தியப்படுத்தியுள்ளது.
இதே நடைமுறையை தேர்தலுக்கும் அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. வாக்காளர்களின் மனதை மாற்றுவதில் சமூக ஊடகங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் தேர்தல் பரப்புரைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். 2014 மோடி தலைமையில் பிஜேபி ஆட்சிக்கு வர மிக முக்கிய காரணியாக இணையப் பரப்புரை இருந்திருக்கிறது. மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் மிகத்துல்லியமாக இணையத்தின் பயன்பாட்டை கணித்த பிஜேபி தனது தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன் மிகப்பிரமாண்டமாக மோடி என்னும் பிம்பத்தை இணையத்தின் போலிச்செய்திகளால் கட்டமைத்தனர் என சிவம் சங்கர் சிங் நூலின் வழியே விளக்குகிறார்.
முந்தைய காலங்களில் தேர்தல் பரப்புரைகளுக்கான வியூகங்களை முழுக்க கட்சி சார்ந்த தலைவர்களும், தொண்டர்களுமே திட்டமிட்டனர். மக்களிடம் நேரடியாகக் களத்தில் உரையாடுவது, விளம்பரங்களை செய்தல் என அனைத்து வேலைகளையும் கட்சியினரே செய்து வந்த நிலையில், இன்று அந்த வேலைகளை தேர்தல் ஆலோசகர்கள் என்ற பெயரில் தனிநபர்களோ, ஒரு நிறுவனமோ செய்யும் நிலைமை வளர்ந்துள்ளது. தேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என அனைத்துத் தரப்பட்ட நபர்களை வைத்து ஒட்டுமொத்த தேர்தல் பரப்புரைகளை இந்நிறுவனங்கள் திட்டமிட்டு அரசியல் கட்சிகளுக்கு உதவுகின்றன. இந்தப் பணியில் மிகப் பிரபலமானவர் பிரசாந்த கிஷோர். அவரின் IPAC நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தின் வழியே பல அதிர்ச்சிதரத்தக்க தகவல்களை நூலாசிரியர் நமக்கு அளிக்கிறார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு சமூக வலைத்தளங்களில் இருந்து தனிநபர் தகவல்களை “தரவு பகுப்பாய்வு” செய்து வாக்காளர்களின் சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் முறைகள் நூலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தமது வேட்பாளர்களை தங்கள் எண்ணங்களில் இருந்து மதிப்பீடு செய்வதை இவர்களின் விளம்பர உத்திகள் மடைமாற்றுகின்றன. இத்தகைய உத்திகள்தான் குஜராத் கலவர நாயகனை வளர்ச்சியின் நாயகனாக நம்பச்செய்தது. மேற்சொன்னதுபோல இந்திய வலதுசாரிகள் இந்த நுட்பத்தை மிகத்தெளிவாக உள்வாங்கிக் கொண்டு வேலை செய்தனர். மேலும் வாட்சப் வழியே அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் குறித்து மிக விரிவாக நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சனைகளும் இல்லாத அரசைக் கூட இப்படியான போலியான பரப்புரைகளால் எளிதில் வீழ்த்திவிடலாம் என்பதற்கு திரிபுராவின் இடதுசாரி அரசைக் கவிழ்த்த முறையை உதாரணமாக்கி நூலாசிரியர் விவரித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முறையில் வெகுஜன ஊடகங்களும், பெரிய முதலாளிகளின் நேரடி பங்கினை இந்த நூல் வெளிக்கொணர்கிறது. இந்தியாவின் மிகப்பெரும்பான்மை ஊடகங்கள் கார்பரேட் முதலாளிகள் வசமும், அவர்கள் நேரடியாக அரசியல்வாதிகளின் தொடர்பிலும் இருக்கின்றனர். இப்படியான சூழலில் ஜனநாயகத்தின் மிக முக்கியமான சக்தியான ஊடகம் எப்படி அரசின் கொள்கைகளை எதிர்த்து கேள்வி கேட்கும்? இந்திய வெகுஜன ஊடகங்கள் பெரும்பாலும் ஆளும் அரசின் பிரச்சார அமைப்பாகவே இருக்கின்றன. என்னதான் இந்திய ஊடகங்கள் இடதுசாரித்தன்மை கொண்டதாக இருப்பதாக வலதுசாரிகள் குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தாலும் உண்மையில் பெரும்பான்மை ஊடகங்கள் வலதுசாரிகளுக்கே சாதகமாகவும், அந்த கருத்தியலாளர்கள் நிரம்பிய நிர்வாக அமைப்பை உடையதாகவும் உள்ளதை ஆதாரங்களுடன் நூலாசிரியர் நிறுவுகிறார். இப்படியான ஊடகங்கள் வலதுசாரிகளுக்கு ஆதரவான வாக்களர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
மக்கள் பிரதிநிதிகளை அரசாளும் மன்றங்களுக்குத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தாண்டி தேர்தல் என்பது ஒரு பங்குச்சந்தை தளமாக மாறிவிட்டது. அதிக முதலீடு செய்தவரே வெற்றி பெறுபவராகிறார் என்ற நிலைமையில் பெருநிறுவனங்களிடம் அதிகமாக முதலாளித்துவ அரசியல் கட்சிகள் நிதி வாங்குகின்றனர். அதற்கு பிரதிபலனாக அந்நிறுவனங்களுக்கு ஏற்றபடியே சட்டங்களை அரசுகள் இற்றுகின்றன. இந்த “சலுகைசார் முதலாளித்துவம்” பொதுமக்களின் எந்தவகை அடிப்படை தேவைக்களுக்குமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பதில்லை. மானியக்குறைப்பு, வரிவிதிப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை மக்கள் தேவைகள் கூட கார்ப்பரேட் நலன்களுக்கு ஏற்றவகையிலேயே இங்கு நிறைவேற்றப்படுகின்றன. கடந்த ஏழு வருட பிஜேபி ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியினைக் காட்டிலும் இலாபத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்கள் கூட தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. பெருநிறுவனங்களால் அதிகளவில் பலனடைந்த பாஜக ஒருபுறம் “சுயசார்புப் பொருளாதாரம்” எனப் பேசிக்கொண்டே மறுபுறம் மக்களின் நிறுவனங்களை குறிப்பிட்ட முதலாளிகளுக்கு விற்றுவருவது தக்க விவரங்களோடு நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
பிஜேபியின் தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய காலத்தில், தான் கண்ட அவர்களின் களச்செயல்பாடுகளை ஒவ்வொரு அத்தியாயத்திலும் திரு.சிங் விளக்கியுள்ளார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என பல நாசகரத் திட்டங்களை பிஜேபி செயல்படுத்தியதில் அவர்கள் காட்டிய அதிகார மமதைகளை இந்நூல் குறிப்பிடத் தவறவில்லை. கும்பல் வன்முறைகள், வெறுப்புப் பேச்சுகள், ஒத்துவராத ஊடகங்களின் மீதான அதிகாரத் தாக்குதல்கள் என செயல்படும், இந்தியாவின் ஆகச்சிறந்த வலதுசாரி கட்சியின் முகத்திரையினை அம்பலப்படுத்த இந்நூல் முயற்சித்துள்ளது. எந்தவொரு கேள்விகளுக்கும் பதில் தராமல் அதை மடைமாற்றும் யுக்தியை பிஜேபி எவ்வாறு முன்னெடுக்கிறது, தேச விரோதிகள், பயங்கரவாதிகள், அர்பன் நக்சல்கள் என்று அரசை கேள்வி கேட்போரை அடையாளப்படுத்தி எவ்வாறு வெகுமக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தங்கள் சமூக வலைதள, வெகுஜன ஊடக கட்டமைப்பை வைத்திருக்கிறது என்பதை விரிவாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். பொய்ச் செய்திகளை தங்களது இலட்சக்கணக்கான அதிகாரபூர்வமற்ற வாட்சப் குழுக்களின் வழியே பரப்பி தேர்தல் ஆதாயம் அடையும் பிஜேபியின் தகிடுதத்தங்கள் நூலில் விரவிக்கிடக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் குறித்து மக்கள் பெரியளவில் விழிப்புணர்வில்லாத நிலையிலேயே உள்ளனர். ஒரு சட்டமன்ற அல்லது பராளுமன்ற உறுப்பினர் கடமையைக் கூட அறியாத நிலையில்தான் பெரும்பான்மை வாக்காளர்கள் உள்ளனர். ஒரு கட்சியின் கொள்கை அல்லது வேட்பாளர்களின் தகுதியை மதிப்பிட்டு அறியும் நிலையில் வாக்காளர்கள் இல்லை. அவர்களது தேர்வு செய்யும் மனநிலை அரசியல் கட்சிகளின் பரப்புரைகளாலும், பொது ஊடகங்களாலுமே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் நவீன தேர்தல் யுகத்தில் பணமில்லாத, முற்போக்குக் கொள்கை சார்ந்த கட்சிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இந்தத் தேர்தல் அமைப்பு முறையினை எதிர்கொள்வதென்பது மிகுந்த சிக்கலான, கடினமான பணிதான். ஆனாலும் இதில்தான் நீண்ட காலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஒரு முழுமையான ஜனநாயக அமைப்பை, தேர்தலின் முக்கியத்துவத்தை, அது செயல்படுத்தப்படும் முறைகளை தெரிந்துகொள்வதின் மூலமே ஒரு வலுவான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப முடியும். தாமஸ் ஜெபர்சனின் கூற்றுப்படி இந்த அமைப்பு முறையை மக்களிடம் அம்பலப்படுத்துவதுதான் இந்த அமைப்பினை எதிர்த்து வெற்றிகொள்ள ஒரே வழி. அப்படியான பணிகளுக்கு சிவம் சங்கர் சிங் எழுதிய இந்த நூல் முக்கிய ஆவணமாக இருக்கிறது.
நூல்: இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?
ஆசிரியர் : சிவம் சங்கர் சிங்
தமிழில் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
(நன்றி.. இளைஞர் முழக்கம் ஏப்ரல் 2021 இதழ்)