இஸ்லாம் வாளால் பரவியதா?
# இஸ்லாம் வாளால் பரவியதா? #
( ரிசாலத்து அல்ஜிஹாத் – மாத இதழ்)
இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும், திருக்குர்ஆன் தமக்குக் கற்றுக்கொடுத்த போதனைமூலம் ஒன்றைப் புரிந்திருந்தார்கள். நிர்ப்பந்தம், அச்சுறுத்தல் மூலம் கொள்கைகள் மனித மனங்களில் இடம்பிடிக்கா ; மனமாற்றத்தால் மட்டுமே இடம்பிடிக்கும் என்பதே அது.
” ( நபியே!) அறிவார்ந்த ( மெய்ப்பொருளாலும்) அழகான அறிவுரையாலும் இறைவழிக்கு ( மக்களை) அழைப்பீராக!” (16:125) என்றே அல்லாஹ் கூறுகின்றான்.
நிர்ப்பந்தம் ( அல்லது அடக்குமுறை) என்பது, மனிதனின் மாமிசத்தையும் எலும்பையும் வேண்டுமானால் பெறலாமே தவிர, மனமாற்றம் மட்டுமே அவனுடைய குருதி, நரம்பு, உணர்வு எங்கும் பரவியிருக்கும். திணிக்கப்படும் எந்தக் கொள்கையும் மனதில் கடும் விரோதத்தையே வளர்க்கும் ; அக்கொள்கையை அழிக்கவும் அதிலிருந்து வெளியேறவுமே மனிதன் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பான்.
இதனாலேயே, நிர்ப்பந்திக்கப்பட்டவரின் ஒப்பந்தங்கள் செல்லாதவை என அறிவித்தது இஸ்லாமிய ஷரீஆ ; அவ்வாறே, கொள்கைகளில் நிர்ப்பந்தம் கூடாது எனத் தெளிவுபடுத்தியது. ” மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது” என்கிறது குர்ஆன்.
இறைத்தூதர் ( ஸல்) அவர்கள் தமது பரப்புரையை மக்கள் மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகக் கட்டாயப்படுத்தும் வழிகளைக் கையாண்டிருந்தால், – அல்லாஹ் காக்க வேண்டும் – தம் பொறுப்பையே அறியாதவர்களாகியிருப்பார்கள் ; தம் பணியின் எல்லைகளைத் தாண்டியவர்களாயிருப்பார்கள்.
தம் தூதுவத்தை நம்பவைப்பதற்காக இறைத்தூதர் ஒரு நபரையேனும் கட்டாயப்படுத்தினார்கள் என எந்தப் புத்திசாலியும் வாதிடமாட்டான். மாறாக, இறைத்தூதரின் இறைநம்பிக்கை, நடவடிக்கை, எதிரிகளின் தொல்லைகளைச் சகித்தது ஆகியவைதான், இந்தப் பரைப்புலையின்பால் மக்களை ஈர்க்கும் அம்சங்களாக இருந்தன. எல்லா வகையிலும் மனித இயல்போடு இயைந்ததாக அந்தப் பரப்புரை இருந்தது.
இறைத்தூதர் ( ஸல்) அவர்கள் சந்தித்த போர்களெல்லாம் தற்காப்பிற்கானவை. தாக்குதல்கள் போன்று அவை மேலோட்டமாகத் தோன்றும். ( சொல்லப்போனால்) போர்க் கலையில் அறியப்படுவதுபோல், சண்டையின் விசையைக் கையகப்படுத்தவும் திடீர் தாக்குதலின் சக்தியை உறுதி செய்யவும் இத்தோற்றம் தேவைதான்.
( إن شاء الله)