நாயகம் எங்கள் தாயகம்
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
6. வள்ளல் வளர்ந்தார் !
(பக்கம் 77-79)
ஆதம் நபிமுதல்
அனைத்து நபிகளும்
ஆடுகள் மேய்த்தார்கள்.
ஆமீனா பெற்ற
அருமைச் செல்வரும்
அவ்வாறே செய்தார்கள்.
இதுதான்
ஆண்டவன் கட்டளையோ?
ஆடுகள் மேய்ப்பதால்
இயற்கையினோடு
இரண்டறக் கலந்தார்கள்.
இறைவனின் விருப்பம்
இப்படி ஆனதுவோ?
ஆடு மேய்ப்பவர்
அத்தனை பேரும்
நபிகள் ஆனதில்லை !
நபிகளாய் உயர்ந்தவர்
அத்தனை பேரும்
ஆடுகள் மேய்த்தவரே !
–☪–☪–☪–☪–☪–☪–☪–☪–
7. அன்னை மடியில் அண்ணல் !
தாழக்குடை பிடிக்கும்
தளிர்ப்பச்சை மரங்களின் கீழ் –
வெட்ட வெளிப்பொட்டல்களின்
வேதாந்த வெண்மணலில் …
செயற்கைக்கு இடம் இல்லா
ஊர்க்கோடி நதிக்கரையில் …
பூவரச மர இலையில்
புல்லாங்குழல் இயற்றி …
மத்தளமும் குழலும்
உதடுகளில் ஊர்ந்து வர …
ஆடு நடத்தும் சிறுவர்களை
அள்ளிடுவேன் கண்களிலே …
நபிமார்கள் செய்த தொழில்
நாளெல்லாம் இயற்றுகின்ற …
கோவலரே உங்களுக்குக்
கும்பிடுநான் போடுகின்றேன் !
ஒரு நாள் முகம்மது
ஆடு மேய்த்திட
அடிவாரம் போனார்.
ஹலீமாவின் குழந்தைகள்
கிடைக்கு ஒன்றாய் கிடந்தனர் !
முகம்மது
ஆமணக்குச் செடியாய்
அழகு காட்டினார்!
ஆமணக்கு …
வெடித்தால் விழும்.
விழுந்த இடத்தில் எழும்.
மற்ற சிறுவர்கள் …
இலவம் பஞ்சாய்
எங்கும் அலைந்தனர் !
அப்போதுதான் அந்த
அதிசயம் நிகழ்ந்தது …