அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!
அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!
“நாம் மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில், ஒவ்வொரு உதாரணத்தையும் திட்டமாக விவரித்திருக்கிறோம்; (எனினும்) மனிதன் (வீண்) தர்க்கம் செய்வதால் மிக அதிகமானவனாக இருக்கிறான்”.(18:54)
@இறைவேதமான அல் குர் ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் அல்லாஹ் மிகவும் விளக்கமாக நமக்கு சொல்லித்தந்துள்ளதாக மேலே உள்ள இறைவசனம் நமக்கு உணர்த்தியுள்ளது.
ஆனால், இன்றைய மனிதனோ குர்ஆனை ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொல்லி விட்டு குர்ஆனில் பிழை உண்டு (நவூதுபில்லாஹ்…) என்று தமது ஆராய்ச்சியை பெருமைப்படுத்தி கொள்கிறான்.
தமிழகத்தை சேர்ந்த ஒருவர் குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த போது அரபு எழுத்தான “வாவு” என்னும் சொல்லுக்குரிய “நிச்சயமாக” என்னும் வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து விட்டு மொழி பெயர்த்துள்ளார்.
“வல்லாஹி” என்னும் “நிச்சயமாக” என்ற வார்த்தையை அரபு மக்கள் தான் அதிகம் பயன்படுத்துவார்கள்; அதனால் அல்லாஹு த ஆலா “வ” என்பதை சேர்த்துள்ளான்; ஆனால் தமிழ் மக்கள் நிச்சயம் என்பதை அடிக்கடி சொல்வதில்லை என்பதால் நான் அந்த வாவுக்குரிய அர்த்தத்தை நீக்கியுள்ளேன் என்று விளக்கமும் சொல்லியுள்ளார்.
குர்ஆனில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹு த ஆலா விளக்கம் கொடுத்த பின்னரும் மொழியாக்கம் என்ற பெயரில் அல்லாஹுவுக்கே அறிவுரை கூறும் இந்த மனிதனை என்னவென்று சொல்வது?
ஆதமுக்கு (சஜ்தா) சிரம் தாழ்த்துமாறு அல்லாஹ் சொன்ன நேரத்தில் மலக்குகள் எல்லோரும் சஜ்தா செய்த போது ஷைத்தான் மட்டும் அதனை நிராகரித்து விட்டு தமது நிராகரிப்புக்கான விளக்கத்தையும் அல்லாஹுவுக்கு கொடுத்தான் இப்லீஸு.
ஆதம் களிமண்ணால் படைக்கப்பட்டவர்; நானோ நெருப்பால் படைக்கப்பட்டவன்; நெருப்பு மேலெழுந்து போக கூடியது, களிமண்ணோ கீழே விழக்கூடியது; அதனால் மேலே போகும் நெருப்பான உயர்ந்தவனான நான் கீழே விழும் களிமண்ணுக்கு சஜ்தா செய்வது சரியாகாது என்று லாஜிக்கோடு விளக்கம் கொடுத்தான் ஷைத்தான்.
அன்றைய ஷைத்தான் அல்லாஹுவுக்கு விளக்கம் கொடுத்ததற்கும், இன்று அல்குர்ஆனில் “வ” என்ற அரபு எழுத்துக்கு அல்லாஹுவுக்கே விளக்கம் கொடுத்துள்ள தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே நினைக்கிறேன்?
ஆராய்ச்சி என்னும் பெயரில் அதிக பிரசங்கித்தனமான முட்டாளாக இருப்பதை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.