அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!
அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!
“நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக,இதனை அரபி(மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.(12:2)
@அண்ணலாரின் புரிதலுக்காகவே அல் குர்ஆனை அரபி மொழியில் இறக்கியதாக அல்லாஹ் அறிவித்துள்ளான்.குர்ஆன் இறங்கிய போது அண்ணலாரின் உம்மத்துகளில் மிகுதமானவர்கள் அரபி மொழி பேசக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.
உலகம் முழுவதும் அரபி மொழி பரவியதற்கு சகாபாக்களும்,ஷுஹதாக்களும்,இமாம்களும் காராணமாயிருந்துள்ளனர் என்பதற்கு அவர்களது ஹிஜ்ரத்துகளே சான்றாக உள்ளது.
பரங்கிப்பேட்டையில் அடங்கியுள்ள செய்யிதினா உக்காஷா(ரலி) அவர்களும்,கோவளத்தில் அடங்கியுள்ள செய்யிதினா தமீம் அன்சாரி(ரலி) அவர்களும்,ஏர்வாடியில் அடங்கியுள்ள செய்யிதினா ஷஹீது இப்றாகீம்(ரலி) அவர்களும் வரலாற்றின் உதாரண மகான்களாகும்.
இந்த வரலாற்றின் பின்னணியில் தான் நமது முன்னோர்களும்,பாட்டன்மார்களும்,அன்றைய பெற்றோர்களும் அரபி மொழியின் மகத்துவம் கருதி அதனை தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வந்தனர்.
அதனால் தான் அல் குர்ஆனை அரபியிலேயே ஒதுகின்ற வாய்ப்பு நமக்கு கிடைத்தது.கடந்த 30 ஆண்டுகளாக அரபி மொழியின் அவசியம் சிலரால் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டன.
அதனால் இன்றைய இளைஞர்களும்,இளம் சிறார்களும் அரபி தெரியாதவர்களாக தமிழ் மொழியாக்கத்தை மட்டுமே முன்னிறுத்தி மார்க்கம் தெரியும் நிலையில் உள்ளனர்.
அரபி மொழியின் அவசியம் உணரப்பட்ட காலத்தில் ஒவ்வொரு குழந்தையும் அதிகாலை 6 மணிக்கே எழுந்து பழக்கப்பட்டனர்.ஆம் அந்த நேரத்தில் எழுந்தால் மட்டுமே மக்தப் மதரஸா என்னும் அடிப்படை அரபி கற்றலின் பள்ளிக்கு செல்ல முடியும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கோஷத்தை முன்னிறுத்தி அதிகாலை எழுகின்ற பழக்கத்தை மாற்றி மதரஸா செல்லும் நிலையையும் மாற்றி இண்டெர்நெட்டில் மார்க்கம் தேடும் அவலநிலைக்கு தள்ளப்பட்ட நம் குழந்தைகளின் தற்போதைய ஒழுக்க நிலை கேள்விக்குறியாகி விட்டன.
நாகரீக நாசகார விபரீதத்தின் பேராபத்தை உணர்ந்து நம் பிள்ளைகளை அதிகாலை எழுப்பி மதரஸாக்களுக்கு அனுப்பி மார்க்கம் கற்க வைப்போம்.நல்லொழுக்கப் பிள்ளைகளாய் வார்த்தெடுப்போம்;அல்லாஹ் போதுமானவன்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.