தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு!
தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு!
நடந்து முடிந்த சட்டமன்ற(2021) தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக மாநில,மாவட்ட,நகர ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்புகள் தங்களுக்கு பிடித்த குறிப்பிட்ட கட்சி அல்லது கூட்டணிக்கு வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்து ஊர் ஊராக சென்று ஒரு கூட்டணி ஆதரவு பிரச்சாரம் செய்து மற்ற வேட்பாளர்களை எதிரியாக அடையாளப்படுத்தினர்.
ஆனால், இதற்கு நேர் மாற்றமாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பினர் தங்களை எந்தவொரு தனிப்பட்ட கட்சியின் ஆதரவாளர்களாக அடையாளப்படுத்தி கொள்ளாமல் பொதுவான நிலைபாட்டில் அரசியல் களத்தை அணுகியது பாராட்டிற்குரியது!
தங்களை சந்தித்து ஆதரவு கோரிய அமமுக,திமுக,பாஜக வேட்பாளர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு இறைமறையின் தமிழாக்க நூலை பரிசளித்து அவர்களை கௌரவப்படுத்திய விதம் அருமை!
அதே வேளையில் நமது தொகுதிக்கான நல்ல வேட்பாளரை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்களிக்க மறந்து விடாதீர்கள் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைக்கவும் தவறவில்லை கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு!
அரசியலில் இன்றைய ஆட்சியாளர்கள் நாளைய எதிர்கட்சிகளாகவும், இன்றைய எதிர்கட்சிகள் நாளைய ஆட்சியாளர்களாகவும் மாறுவதே தேர்தல் களம் சொல்லும் பாடமாகும்.
எந்தவொரு கட்சியும் வாழ்நாள் ஆட்சியாளர்களாக இருந்ததுமில்லை,இனி இருக்க போவதுமில்லை.
ஊர் ஜமாஅத் கூட்டமைப்பு என்பது நடுநிலையாக செயல்படுவதே அறிவானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை உரிமையோடு அணுகி தங்கள் ஊர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்!
தமிழக முஸ்லிம்களின் முன்மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி
(12.04.2021)