செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்!
செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்!
****************************
பச்சிளம் பாலகனைப் பாழ்கிணறு கொண்டதுவே
துச்சமோ இங்குயிர்தான்? சொல்லொணா! – இச்செகத்தில்
உச்சம்பல தொட்டும் உதவாமற் போனதே
சுச்சித்தைக் காப்பதற்கே சொல்!
சொல்லவோர் வார்த்தையிலை சொன்னாலும் தீர்ந்திடுமோ
அல்லல்தான் பெற்ற அன்னையர்க்கே –
அல்லல்போம்
அல்லல்போம் என்றிறைஞ்சி ஆண்டவனை வேண்டுவமே
அல்லல் தொலையட்டும் அங்கு!
அங்கிங்காய் ஆழ்குழாய் ஆழ்துளை மூடிடுக
எங்கும் சிறாரின்பின் செல்கவனம் – மங்கிடாத்
தீண்டும் விதிகண்டே தேம்பாமல் வென்றுமதைத்
தாண்டிடலாம் தூண்டுமதி கொண்டு!
கொண்டுவரும் பூமியிங்கே கொன்றதுவும் நீதியல்லை
பண்டுவளர் நாடிதிலே பைந்தமிழால்! – தொண்டுசெய்வோர்
உண்டெனினும் தோண்டிடவோர் பாதையின்றிப் போயினவே
உன்னுயிரே பாலகனே ஓ!
ஓவென உள்ளமெலாம் புண்ணாகி வெந்தாலும்
வாவென்றால் வாரானே வையமே! – மாவெனும்
கூக்குரலைக் கேட்காயோ? கூற்றவனின் கைகளுனைத்
தாக்கியதால் சேர்ந்தாயோ தாள்?
– சுரேஜமீ
30.10.2019 காலை 7:35