வியர்வை நாற்றம் போக …
A.ரமீஜா மீரான்
கோடைக் காலத்தில அதிக மசாலா, அதிக காரம், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டாம். கோடைக் காலத்தில் இரண்டு வேளைகள் குளித்தால், வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். அதிக வியர்வை துர்நாற்றம் உள்ளவர்கள், குளிக்கும் நீரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து குளித்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.
கோடைக்காலத்தில் பாலியஸ்டர் போன்ற ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது.
கோடைக்காலத்தில் அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். வயதானவர்கள் எழுந்து நடக்க முடியாதவர்கள் தங்கள் அருகிலேயே தண்ணீரை வைத்துக் கொண்டு அடிக்கடி பருக வேண்டும். வயதானவர்கள் வெளியில் செல்லும் போது குடைக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்த வரை வயதானவர்கள் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் எனில் மாலை 5 மணிக்குமேல் செல்லலாம்.
வெயில் காலங்களில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும்போது லைட் கலர் டிரஸ் போட்டு அழைத்து செல்லுங்கள். வெயில் அதிகம் தாக்காது.
வெயில் காலத்தில் தேவையான வத்தல்கள், வடாம் போன்றவற்றை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். சாப்பாட்டிற்கு சைடு- டிஷ் ஆகிவிடும்.
இரவில் தூங்குவதற்கு முன் கண்கள், உள்ளங்கால்கள் மற்றும் தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கோடையின் வெப்பம் உடம்பில் ஏறாது. மேலும் வயிற்று வலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படாது.
தினமும் காலையில் சீரக தண்ணீர் அருந்தினால், வயிறு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். வெள்ளரி பழம், தர்பூசணி, கிர்ணி போன்ற குளிர்ச்சியான பழங்களை சாப்பிடலாம்.
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் தயிரில் பெருங்காயத்தூள், சீரகத் தூள், உப்பு வெந்தயம் சேர்த்து நன்றாக கடைந்து தண்ணீர் சேர்த்து மோராக பருகினால் கோடையில் ஏற்படும் சூட்டு வயிற்றுவலி வயிற்று உப்புசம் ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.
நன்றி : நர்கிஸ் – மே 2014