கோடைக்கேற்ற உணவு வகைகள்
கோடைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, டீ போன்ற சூடான பானங்கள் அதிகமாக பருகுவதை தவிர்த்து, அதற்கு பதிலாக பழச்சாறுகள், நீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். இதனால் உடலுக்கு நல்லது. அதிகளவில் நீர்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய், நார்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். குளிர்ந்த நீரில் சிறிது ஏலக்காய் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது. மேலும் திராட்சை, எலுமிச்சை, தர்பூசணி பழரசங்களை தாராளமாகக் குடிக்க வேண்டும். பார்லி, சர்பத்துகள், மோர், லஸ்ஸி அருந்துவது மிகவும் நல்லது. அவை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியவை. கோடைக்காலத்தில் இளநீர், வெள்ளரி பழம், வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது. அது வியர்வையினால் வெளியேறிய தாதுச் சத்துக்களை மீண்டும் உடலில் சேர்க்க உதவும்.
கோடைக்காலத்தில் எண்ணெய் பொருட்கள், காரமான உணவுகள், புளிப்பு வகைகள், டீ, காபி போன்றவற்றை அதிகமாக உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் உப்பு, காரம் அதிகமுள்ள உணவுப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தக் கூடாது. சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்ற உணவுகளையும் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் தவிர்த்து ஆவியில் வேக வைத்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சாப்பிடலாம்.
நன்றி : நர்கிஸ் – மே 2014