முதுகுளத்தூர் அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.75 லட்சம் பறிமுதல்
முதுகுளத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை செய்ததில் ரூ. 1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் கூட்டுறவு சார்பு பதிவாளர் தண்டபாணி, சப்-இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி ஆகியோர் தலைமையில் சிக்கலில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இசிஆர் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் ஷேக் முகம்மது (32) என்றும் அவர் கீழச்செல்வனூரில் இருந்து ராமநாதபுரத்துக்குச் செல்வதும் தெரியவந்தது. மேலும், அவர் வைத்திருந்த பையில் ரூ. 1. 75 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்தப் பணம் குறித்து விசாரித்தபோது அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை. மேலும், அதற்கு உரிய ஆவணங்களும் ஷேக் முகம்மதுவிடம் இல்லை.
இதையடுத்து, அப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இத் தொகைக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் மேற்படி தொகை திருப்பி வழங்கப்படும் என்றும், இல்லையெனில் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்,