ஊராட்சி செயலர்களுக்குரூ.3 லட்சம் சம்பள பாக்கி
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில், உள்ளாட்சி தேர்தல் முன்பகைகளால், ஊராட்சி செயலர்கள் சிலருக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சம்பள பாக்கி உள்ளதால், சம்பளத்தை பெற, கட்டாய இட மாறுதலை ஊராட்சி செயலர்கள் பெற்று செல்கின்றனர்.
கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலின்போது, தற்போது இருக்கும் ஊராட்சி தலைவர்களுக்கு எதிராக, ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டனர் என, இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்தை வழங்காமல், இழுத்தடித்தனர். கடலாடி ஒன்றியத்தில் இளஞ்செம்பூர், கொத்தங்குளம், சிறைக்குளம், கீழக்கிடாரம், ஆப்பனூர், முதுகுளத்தூரில் மேலக்கன்னிசேரி, மணலூர், கீழக்கொடுமலூர் ஆகிய ஊராட்சி செயலர்களுக்கு சம்பள பாக்கி தொகையாக, 3 லட்ச ரூபாய் வரை உள்ளது. கடலாடி, முதுகுளத்தூர் பி.டி.ஓ.,க்களிடம் புகார் செய்தனர்.
அதிகாரிகளின் நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வு, சம்பள பட்டுவாடா இல்லாததால், ஊராட்சி செயலர்கள், கட்டாய பணிமாறுதல்களை பெற்று, சொந்த ஊர்களைவிட்டு, பல கி.மீ., தூரமுள்ள ஊராட்சிகளில் பணியாற்றி வருகின்றனர். ஊராட்சி செயலர்கள் சிலர் கூறும்போது: தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு சார்பில், முதல்வர் ஜெ.,யிடம் முறையிட உள்ளோம், என்றனர்.