ஈமானை வெளுக்கச் செய் இறைவா !
(பி. எம். கமால், கடையநல்லூர்)
பூவிரித்தாய் பூவிதழில்
புன்னகைத்தாய் –
உன் படைப்பின்
பொக்கிஷத்தை
அறிய வைத்தாய் !
மலர வைத்தாய்
பூவுக்குள்
மணத்தை வைத்தாய்
மனம் கவரும்
அழகை வைத்தாய் !
பூமித்தாய் பால்குடிக்க
வானக் கண்ணீர்
மழையை வைத்தாய்
பூமிநிர் வாணமாய்
ஆகிடாமல்
பச்சைத் தாவர
பட்டாடை தந்தாய் !
இறைவா நீ
அழகானவன் ஆதலினால்
அகிலத்தை அழகாக்கினாய் !
நாங்களோ
அதனை
அழுக்காக்கினோம் !
வெளுக்கின்ற சவுக்காரம்
உன்கையில் இறைவா !
எங்கள்
பூமியை மட்டுமல்ல –
இருண்டு கிடக்கின்ற
எங்கள்
ஈமானையும் நீ
எப்போதும் வெளுக்கச் செய் !